பதவி விலக மறுக்கும் ஷீலா தீட்சித் மோடியுடன் சந்திப்பு: நாகாலாந்திற்கு மாற்றம்?
டெல்லி: கேரள ஆளுநர் ஷீலா தீட்சித் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நியமித்த மாநில ஆளுநர்களை பதவி விலகுமாறு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கேட்டுக் கொண்டது. இந்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட ஷீலா தீட்சித் பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் புதன்கிழமை சந்தித்து பேசினார்.
சந்திப்புக்கு பிறகு ஷீலா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. என்னை மத்திய அரசு பதவி விலகுமாறு கூறவில்லை என்றார்.
கடந்த மார்ச் மாதம் கேரளா ஆளுநராக நியமிக்கப்பட்ட ஷீலா தீட்சித் பதவி விலக மறுத்துவிட்டார். இந்நிலையில் அவரை நாகாலாந்திற்கு மாற்றக்கூடும் என்று கூறப்படுகிறது. குஜராத் ஆளுநர் கமலா பெனிவால் மிசோரத்திற்கு மாற்றப்பட்டதால் அம்மாநில ஆளுநராக இருந்த வைக்கம் புருஷோத்தமன் நாகாலாந்திற்கு மாற்றப்பட்டார். ஆனால் அவர் நாகாலாந்து செல்ல மறுத்துவிட்டார். இந்நிலையில் தான் ஷீலா தீட்சித் நாகாலாந்திற்கு மாற்றப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.
நாகாலாந்து ஆளுநராக இருந்த அஷ்வனி குமார் புதிய அரசின் வேண்டுகோளை ஏற்று தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications