டெல்லியில் பயங்கரம்: பெண் பலாத்காரம் செய்யப்பட்டு ஓடும் காரிலிருந்து வெளியே வீசப்பட்ட கொடூரம்!
டெல்லி: டெல்லியில் இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஓடும் காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி-டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் பார்லா என்ற இடம் அருகே 25 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்தார். அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
உடல் முழுவதும் காயங்கள் இருப்பதால் அந்த பெண்ணை யாரெனும் மர்ம நபர்கள் கற்பழித்து ஒடும் காரில் இருந்து தூக்கி வீசியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண் டெல்லி சலீம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவருக்கு நினைவு திரும்பிய உடன், அவரிடம் இருந்து வாக்குமூலம் பெறப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அதன் பிறகே மற்றவிவரங்கள் தெரியவரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந் தேதி இரவு தனது நண்பருடன் பேருந்தில் சென்ற மருத்துவ மாணவி நிர்பயா, 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப் பட்டார். பின்னர், சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவி, டிசம்பர் 29-ந் தேதி பரிதாபமாக இறந்தார்.
நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பு குறித்த பிரச்சாரம் தீவிரமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.