கேஜ்ரிவால் இல்லத்தில் பரபரப்பு.. ஆம் ஆத்மி எம்எல்ஏக்களால் டெல்லி தலைமைச் செயலாளர் தாக்கப்பட்டார்?
Recommended Video
டெல்லி: டெல்லி மாநில தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ், அம்மாநில முதல்வர் கேஜ்ரிவால் இல்லத்தில் நேற்று இரவு நடந்த ஆலோசனை கூட்டத்தின்போது தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
மொத்தம் 11 ஆம்ஆத்மி எம்எல்ஏக்களால் தாக்கப்பட்டதாக தலைமைச் செயலாளர் போலீசில் புகார் அளித்துள்ளதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலிடம் அறிக்கை கேட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
ராஜ்நாத்சிங் கோபம்
டிவிட்டரில் இதுபற்றி அவர் கூறுகையில், "டெல்லி அரசின் தலைமைச் செயலாளருக்கு நடந்த சம்பவத்தை அறிந்து கடுமையான வருத்தம் அடைந்துள்ளேன். குடிமை பணியாளர்கள், மரியாதையுடனும், அச்சமின்றியும் பணியாற்றும் நிலை வேண்டும்" என்று கோபத்தோடு கூறியுள்ளார். ஐஏஎஸ் அதிகாரிகள் குழு ஒன்று, ராஜ்நாத்சிங்கை இன்று சந்தித்து, டெல்லி தலைமைச் செயலாளர் தாக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளது. நீதி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி மறுப்பு
இருப்பினும் இந்த புகாரை ஆம் ஆத்மி மறுத்துள்ளது. "பாஜகவின் கைப்பாவையாக இந்த புகார்கள் கூறப்படுகின்றன." என்று ஆம் ஆத்மி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆதார் அடையாள அட்டை நடைமுறையை தப்பும் தவறுமாக செயல்படுத்தியதால், மக்கள் ரேஷன் கடைகளில் பிரச்சினைகளை அனுபவித்து வருவது பற்றி விவாதிக்க ஆலோசனை கூட்டம் கூட்டப்பட்டதாகவும், இதில் முதல்வர் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பங்கேற்றதாகவும், ஆனால் கேள்விகள் எதற்கும் பதிலளிக்காத தலைமைச் செயலாளர், எம்எல்ஏக்கள் மற்றும் முதல்வர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க தேவையில்லை என்றும், துணை நிலை ஆளுநருக்குதான் தான் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சில எம்எல்ஏக்களுக்கு எதிராக கெட்ட வார்த்தைகளையும் அவர் பேசினார் என்று ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது.
ஐஏஎஸ் அமைப்புகள் கண்டனம்
இதனிடையே 3 ஐஏஎஸ் சங்கங்கள், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர். "இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது, தலைமைச் செயலாளர் தரப்பில் இருந்து எந்த தப்பும் இல்லாமலேயே இந்த தாக்குதல் நடந்துள்ளது. அதிகாரிகள் தொடர்ச்சியாக வார்த்தைகளால் புண்படுத்தப்பட்டுவந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக இவ்வாறு நடந்துள்ளது" என்று ஐஏஎஸ் சங்கங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன.
பணியாளர்கள் போராட்டம்
டெல்லி நிர்வாக சார்புநிலை சேவைகள் பிரிவை சேர்ந்த அதிகாரிகள் சிலர், முதல்வர் அலுவலகம் முன்பாக உட்கார்ந்துகொண்டு அவருக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதனால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனிடையே ஆம் ஆத்மி சார்பில் பதில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அதில், ஆம் ஆத்மி கட்சி சீனியர் தலைவர் ஆஷிஷ் கேதன் மற்றும் அமைச்சர் இம்ரான் ஹுசைன் ஆகியோர், தலைமைச் செயலகத்தின் உள்ளே வைத்து போராட்டம் நடத்திய அதிகாரிகளால் தாக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆஷிஷ் கேத்தன், இதுபற்றி போனில் போலீசாருக்கு புகார் தெரிவித்துள்ளார்.
ஜாதியை சொல்லி திட்டினாராம்
மேலும், ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற ஆம் ஆத்மி எம்எல்ஏ பிரகாஷ் ஜர்வால், மாநில துணை நிலை ஆளுநருக்கு இமெயிலில் அனுப்பியுள்ள புகாரில், தலித் மக்களுக்கு ஒழுங்காக ரேஷன் பொருட்கள் சென்று சேரவில்லையே ஏன் என்று ஆலோசனை கூட்டத்தில் தானும், சக எம்எல்ஏ அஜத் தத்தும் கேள்வி எழுப்பியபோது, ஜாதிரீதியாக தலைமைச் செயலாளர் அவதூறு பேசியதாகவும், அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பரஸ்பர புகார்களால் டெல்லி அரசியல் அனல் பறக்கிறது.