குஜராத் சட்டமன்றத் தேர்தல்.. மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை.. ஆம் ஆத்மி அறிவிப்பு!
அகமதாபாத்: குஜராத்தில் ஆம்ஆத்மி ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு மேற்பட்ட மகளிருக்கு ரூ. 1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இந்த நிலையில் டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியும் குஜராத் மாநில தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியமைக்க தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதற்கான பணிகளை ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ள ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கடுமையாக சாடி வருகிறார். அதேபோல் ஆம் ஆத்மியின் வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார். அதில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு
தொடர்ந்து, டெல்லியில் சில ஆண்டுகளில் 12 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளோம். இதுபோன்று குஜராத் இளைஞர்களுக்கும் வேலை வழங்குவோம். அது நடக்கும் வரை, வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். 27 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. ஆனால் ஊழல் செய்வது மட்டுமே பாஜகவின் செயல்பாடாக உள்ளது என்று குற்றம்சாட்டினார்.

உரிமைத் தொகை
இந்த நிலையில் அகமதாபாத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், குஜராத்தில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும். இந்த ஆயிரம் ரூபாய் உதவித்தொகை இலவசம் அல்ல. இது உங்கள் உரிமை. மக்கள் பணம் மக்களிடம் செல்ல வேண்டும். சுவிஸ் வங்கியில் அல்ல.
பாஜக மற்றும் காங்கிரஸ் ஒருவரையொருவர் எதிர்த்து பேசி கொண்டிருக்கின்றனர். அவர்கள் மக்கள் நலனை பற்றி பேசவில்லை. மின்சாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். டெல்லி,பஞ்சாப்பில் மின்சாரத்தை இலவசமாக அளித்தோம். குஜராத்திலும் செய்வோம் என்று தெரிவித்தார்.

திமுக வாக்குறுதி
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது திமுக, மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில், ஆம் ஆத்மி கட்சி மகளிருக்கான உரிமைத் தொகை வாக்குறுதியை கையில் எடுத்துள்ளது. அதிலும் 18 வயதுக்கு மேற்பட்ட மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. குஜராத் சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் வாக்குறுதிகள் மக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications