அரசு சேவைகள் இனிமேல் டோர் டெலிவரி.. டெல்லி அரசு அதிரடி!
அரசு சேவைகளை வீட்டில் இருந்தபடியே பெறும் புதிய திட்டம் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
டெல்லி: இனிமேல் அரசின் சேவைகள் எல்லாம் நேரடியாக வீட்டிற்கே வந்து செயல்படுத்தப்படும் இதற்காக அதிக அளவில் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று டெல்லி முதல்வர் அறிவித்து உள்ளார்.
அரசின் அடிப்படை சேவைகளான ரேஷன் பொருட்கள் வழங்குதல், அடையாள அட்டை கொடுப்பது, மானியப் பொருட்கள் வழங்கல், வரி செலுத்துதல் போன்றவை நேரடியாக வீட்டிற்கே வந்து செயல்படுத்தப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார்.

உலகத்திலேயே முதன்முறையாக இந்த முறை டெல்லியில் கொண்டுவரப்பட உள்ளதாகவும் முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். அரசு அலுவலகங்களில் இருந்து வரும் அலுவலர்கள் வீட்டுவாசலிலேயே இருந்து ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு, அதற்கான சேவைகளை வழங்குவார்கள். இதற்காக அதிகப் பணியாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.
அரசு அலுவலகங்களில் இருக்கும் நீளமான வரிசைகளைக் குறைப்பதற்காகவும், மக்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்து உள்ளார். திருமணப்பதிவு, சாதிச் சான்றிதழ், முகவரி மாற்றம் முதலான சேவைகள் வீட்டில் இருந்தபடியே பெற முடியும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.
முதற்கட்டமாக இந்த திட்டத்தில் 40 சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. டெல்லியில் நிலவி வரும் காற்று மாசுபாட்டால் கடந்த சில நாட்களாக டெல்லி மக்கள் அரசு மீது கோபத்தில் இருக்கிறார்கள் அதை சரிசெய்யவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications