டெல்லியில் புதிய ஆட்சி அமைப்பதில் கால தாமதம் ஏன்?: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
டெல்லி: டெல்லியில் புதிய ஆட்சி அமைவது தொடர்பாக முடிவெடுப்பதில் கால தாமதம் செய்வது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லி சட்டசபையைக் கலைத்து, மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது டெல்லியில் பெரும்பான்மை பலம் கொண்ட கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கலாம் என்ற துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கின் பரிந்துரைக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதாக, மத்திய அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் ஒப்புதல் கடிதத்தின் நகலை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் உச்சநீதிமன்றத்தில் வழங்கினார். அப்போது மத்திய அரசுக்கு நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.ஜனநாயக நாட்டில் பல மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் இருக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், துணை நிலை ஆளுநர் இந்த விவகாரத்தில் 5 மாதங்களாக முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தியது ஏன் என கேள்வி எழுப்பினர்.
போதிய கால அவகாசம் இருந்தும், வழக்கு விசாரணையின் போது மட்டுமே மத்திய அரசு புதிய அரசு குறித்த முடிவை அறிவிப்பது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆம் ஆத்மி தொடர்ந்த வழக்கின், முகாந்திரத்தை கருத்தில் கொண்டு அதை மேற்கொண்டு விசாரிப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என தெரிவித்தனர்.
டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசு பதவி விலகியதை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி முதல் அங்கு ஜனாதிபதி தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.












Click it and Unblock the Notifications