டெல்லி: ஆம் ஆத்மியின் வெற்றியைக் கொண்டாடிய ஆட்டோ டிரைவர்கள்!
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியை "சாமானிய மனிதனின்" வெற்றி என்று கூறி டெல்லி ஆட்டோ ஓட்டுநர்கள் கொண்டாடியுள்ளனர்.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலில் 67 தொகுதிகளை கைப்பற்றியது ஆம் ஆத்மி கட்சி. இந்த வெற்றியை மிகப்பெரிய திருவிழாவாக ஆம் ஆத்மி கட்சியினர் கொண்டாடினர்.
டெல்லியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள், ரிக்ஷா தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்களின் அனைவரும் ஆம் ஆத்மி கட்சிக்கே தங்களின் வாக்குகளைப் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது சாமானிய மனிதனுக்கு கிடைத்த வெற்றி. இனி போலீஸ் தொல்லை இருக்காது என்று ஆட்டோ டிரைவர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடியுள்ளனர்.
ஆட்டோவிற்கு அலங்காரம்
ஃபிரோஸ் ஆலம் என்ற 32 வயது ஆட்டோ ஓட்டுநர் நேற்றைய தினம் வாடிக்கையாளர்களை ஏற்றி பணம் சம்பாதிப்பதை விடுத்து ஆம் ஆத்மியின் வெற்றியை நூதனமாகக் கொண்டாடியுள்ளார்.
தனது ஆட்டோவை மலர்களாலும், ஆம் ஆத்மி போஸ்டர்களாலும் அலங்கரித்த பிரோஸ் ஆலம் இதற்காக ரூ.1,200 செலவழித்ததாகக் கூறினார்.
கொண்டாடுவோம்
"இது நடக்கும் என்று எனக்குத் தெரியும். ஆம் ஆத்மி அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. 1,200 ரூபாய் செலவு செய்தது பற்றி கவலையில்லை. கொண்டாடப்படவேண்டியது எங்கள் கட்சி வெற்றி பெற்றது என்பதே.
சாமானியர்களின் அரசு
சிறு சிறு விஷயத்துக்கெல்லாம் போலீஸ் எங்களைத் தொந்தரவு செய்து பணம் பிடுங்கி வந்தனர். கெஜ்ரிவால் அரசு இதனை தடுத்து நிறுத்தும். எங்களைப் போன்ற சாமானியர்களுக்காக ஆம் ஆத்மி பணியாற்றும்." என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பிரோஸ் ஆலம்.
ஆட்டோ ஓட்டுநர்களின் ஆதரவு
2013-ஆம் ஆண்டு தேர்தலின் போதும் சரி, தற்போதைய தேர்தலின் போதும் சரி ஆட்டோ ஓட்டுநர்களின் ஆதரவு பெரிய அளவில் ஆம் ஆத்மிக்கு இருந்ததாக கூறப்படுகிறது.
அனைவரின் ஓட்டும் ஆம் ஆத்மிக்கே
சலீம் அன்சாரி என்ற 26 வயது ஆட்டோ ஓட்டுநர் உற்சாக மிகுதியில், "ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் ஆம் ஆத்மிக்கே வாக்களித்தோம். போலீஸ் எங்களை தொடர்ந்து தொந்தரவு செய்வது குறித்து நாங்கள் வெறுப்பில் இருந்தோம். இனி போலீஸ் எங்களை தொந்தரவு செய்யாது, எங்களிடமிருந்து பணம் பிடுங்காது." என்றார்.
எங்களின் மனிதர்
48 வயதான ஹரிந்தர் பாஸ்வான் என்ற ஆட்டோ டிரைவர் இந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினார். "நான் வசிக்கும் இடத்தில் நிறைய ரிக்ஷாக்காரர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கடைவீதி சிறு வியாபாரிகள் இருக்கின்றனர். நாங்கள் அனைவரும் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு வாக்களித்தோம், காரணம் அவர் எங்களுக்காக நிற்கிறார் என்றார்.
போலீஸ் தொல்லை
இதேபோல தினேஷ் குமார் கூறுகையில், "அவர் எங்களுக்காக குரல் கொடுத்தார். இப்போது நாங்கள் அவருக்கு உதவி புரிந்துள்ளோம். கடந்த 49 நாள் ஆட்சியில், எங்களுக்கிருந்த போலீஸ் தொல்லையை ஒழித்தார் கெஜ்ரிவால்." என்றார்.
இது எங்களின் வெற்றி
30 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வரும் பிரதாப் சந்த் என்ற ஆட்டோ டிரைவர், தனது தொழிலுக்கு விடுப்பு அளித்துவிட்டு ஆம் ஆத்மி வெற்றியைக் கொண்டாடினார். 65 வயதாகும் அவர், எங்களுக்கு தினசரி இம்மாதிரியான மகிழ்ச்சி கிடைக்காது. எனது தின வருவாயை இழக்கும் அளவுக்கு மதிப்புமிக்க நாள்தான் இந்த நாள், இது எங்களது வெற்றி." என்று கூறினார்.
துடைப்பம் ஏந்தி
அக்சர்தாம் மேம்பாலத்தில் சுமார் 60 ஆட்டோ ஓட்டுநர்கள் துடைப்பத்துடன் ஆம் ஆத்மியின் வெற்றியை கூச்சலுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.












Click it and Unblock the Notifications