டெல்லியில் கிரண்பேடி தலைமையில் ஆட்சி அமையும்- பிரதமர் மோடி! ஆம் ஆத்மி மீது கடும் தாக்கு!
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா வென்று கிரண்பேடி தலைமையில் ஆட்சி அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு வரும் 7-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் நாளையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வடைகிறது.

டெல்லி தேர்தலையொட்டி அம்பேத்கர்நகரில் பிரதமர் மோடி பிரசாரத்தின் போது பேசியதாவது:
கடந்த லோக்சபா தேர்தலை விட இம்முறை இங்கே கூட்டம் அதிகமாக உள்ளது. இதன் மூலம் டெல்லியில் என்ன மாதிரியான தேர்தல் முடிவுகள் வரப்போகிறது என்பது தெரிகிறது.
எங்களைப் பொறுத்தவரை நாங்கள் ஒருநிமிடத்தைக் கூட வீணாக்க விரும்பவில்லை. டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான உடன் கிரண்பேடி தலைமையில் அமையப் போகும் ஆட்சியில் டெல்லியை உலகத் தரம்வாய்ந்த நகராக்குவோம்.
டெல்லியில் கடந்த 16 ஆண்டுகாலம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த தவறுகளை இனி வரும் 5 ஆண்டுகளில் நாங்கள் சரி செய்வோம்.
என்னுடைய ஒரே அரசியல் தாரக மந்திரமே வளர்ச்சி என்பதுதான். டெல்லி அனைத்து குடிசைவாசி மக்களுக்கும் வீட்டு வசதி செய்து கொடுப்போம். அந்த வீடுகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்போம்.
டெல்லியில் நிலையான வலுவான ஒரு அரசு அமைய வேண்டும். இங்கே நிலையற்ற ஒரு வலுவில்லாத அரசு அமைந்ததால் ஏற்பட்ட விளைவுகளை நீங்கள் சந்தித்தவர்கள்.
ஒரு ஏழையின் மகன் நாட்டின் பிரதமரானது எப்படி என எதிர்க்கட்சிகளுக்கு இன்னமும் புரியவில்லை. கிரண்பேடி ஆட்சிக் காலத்தில் டெல்லி ஒளிரும்.
ஒரு சிலர் நாங்கள் நேர்மையானவர்கள் என்று கூறிக் கொண்டார்கள் (ஆம் ஆத்மி). அவர்களது முகம் தற்போது அம்பலமாகிவிட்டது.
ஆம் ஆத்மி கட்சியைப் பொறுத்தவரையில் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. தேர்தல்கள் வந்து போகும்.. அதற்காக மக்களை நீங்கள் பிளவுபடுத்த முடியாது.
பாரதிய ஜனதாவின் தொலைநோக்கு அறிக்கையில் வடகிழக்கு மாநில மக்களைக் குறித்து குறிப்பிடுகையில் 'குடியேறியவர்கள்'; என பிரிண்டிங் தவறுதலாக இடம்பெற்று விட்டது. இதை பாரதிய ஜனதா கட்சி ஒப்புக் கொள்கிறது.
இதனை அடிப்படையாக வைத்து வடகிழக்கு மாநில மக்களை தூண்டிவிட சிலர் முயற்சிக்கின்றனர். இப்படி சிறு சிறு அரசியல் லாபங்களுக்காக நாட்டின் ஒற்றுமையை நாங்கள் காயப்படுத்தமாட்டோம்.
நாங்கள் ஊழலை பற்றி அறிக்கைவிட்டு பேசுகிறவர்கள் மட்டுமல்ல.. அதை ஒழிப்பவர்களும் கூட.. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜன் தன் யோஜ்னா திட்டத்தின் மூலம் 50 கோடிப் பேர் பயனடைந்துள்ளனர். 1984ஆம் ஆண்டு சீக்கியர் மீதான வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு நாங்கள் நீதி வழங்குவோம்.
நான் இப்போது டெல்லியைச் சேர்ந்தவன்..டெல்லியின் வளர்ச்சியில் எனக்கும் பங்கு இருக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலமாக உலக முதலீடுகளை இந்தியாவுக்கு கொண்டு வருகிறோம். இதன் மூலம் நமது இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குகிறோம்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications