மகள் நினைவில் வாடும் மருத்துவ மாணவியின் பெற்றோர்... சூழ்நிலை அப்படியே இருப்பதாக கவலை
நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை உண்டாக்கிய டெல்லி கற்பழிப்புச் சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி தான் நடைபெற்றது. நண்பரோடு சினிமா பார்த்து விட்டுத் திரும்பிய துணை மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் 6 காமுகர்களைக் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கடுமையாக தாக்கப் பட்டு நடுரோட்டில் வீசப் பட்டார்.
சிகிச்சைப் பலனின்றி அம்மாணவி டிசம்பர் 29ம் தேதி சிங்கப்பூரில் உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு பிறகு கற்பழிப்பு வழக்கில் சிக்கிவர்களுக்கு தண்டனையை கடுமையாக்கி சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன.
ஆனபோதும், டெல்லியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மகளை இழந்து வாடும் மருத்துவ மாணவியின் பெற்றோர் கண்ணீரோடு தெரிவித்திருப்பதாவது :-
"நாங்கள் ஒருபோதும் அந்த துயரச் சம்பவ நினைவிலிருந்து மீள முடியாது. அவள் எங்களுடன் இன்னும் வாழ்வதாக கருதுகிறோம். எங்கள் கண்ணீர் இன்னும் காய்ந்து விடவில்லை. ஒவ்வொரு நாளும் அவளுடைய நினைவுகளுடனே கழிகிறது. வீட்டில் யாராவது ஒருவர் எப்போதும் அழுதுகொண்டே இருப்பதை பார்க்க முடிகிறது.
நாங்கள் சாப்பிடுவதற்கு ஒன்றாக உட்காருகிறபோது என் மனைவி, 'இந்த உணவு இறந்துபோன மகளுக்கு பிடித்தமான உணவு. அவள் இல்லாமல் இதை நாம் சாப்பிடுகிறோம்' என்கிறாள். அவளுக்கு நல்ல சாப்பாடு என்றால் மிகவும் பிடிக்கும். அவள் கடைசியாக வீட்டை விட்டு புறப்பட்டு வெளியே சென்றபோது, 3 அல்லது 4 மணி நேரத்தில் திரும்பி வருவேன் என கூறிச்சென்றாள். ஆனால் எங்கள் காத்திருப்புக்கு முடிவே இல்லை. மணிகள் நாட்களாகவும், நாட்கள் மாதங்களாகவும், மாதங்கள் வருடமாகவும் ஆகிவிட்டது" எனத் தழுதழுக்கும் குரலில் தெரிவித்துள்ளார்.