ஃபேஸ்புக் தோழியுடன் காதலர் தினத்தை கொண்டாட சென்ற இடத்தில் வாலிபர் கொலை
டெல்லி: டெல்லியைச் சேர்ந்த வாலிபர் ஃபேஸ்புக் தோழியுடன் காதலர் தினத்தை கொண்டாட குர்காவ்ன் சென்றபோது இரண்டு பேரால் அடித்து மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்தவர் ஈஷ்வர்(27). அவருக்கு குர்காவ்னைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களாக அவர் ஃபேஸ்புக் மூலம் அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் காதலர் தினத்தை அந்த பெண்ணுடன் அவரது ஊரில் கொண்டாட முடிவு செய்தார்.

இதையடுத்து அவர் நேற்று மாலை குர்காவ்னுக்கு சென்றுள்ளார். மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்து ஈஷ்வரை அந்த பெண் சுஷாந்த் லோக் பகுதியில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
தனது அபார்ட்மென்ட்டில் அந்த பெண் ஈஷ்வருடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரது சகோதரியின் கணவர் ரமேஷ்(30) மற்றும் அவரது டிரைவர் அனில் குமார்(25) ஆகியோர் அங்கு வந்துள்ளனர்.
அந்த பெண்ணும், ஈஷ்வரும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த ரமேஷ் ஆத்திரம் அடைந்தார். இதையடுத்து அவரும், அனிலும் சேர்ந்து ஈஷ்வரை அடித்து நொறுக்கி பால்கனியில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இதில் ஈஷ்வர் இறக்கவில்லை என்பதை அறிந்த ரமேஷ் அவரை காரில் ஏற்றிக் கொண்டு சென்று நெடுஞ்சாலையோரம் அவரை போட்டுவிட்டு சென்றுவிட்டார். அவ்வாறு செய்தால் ஈஷ்வர் விபத்தில் இறந்தது போன்று தெரியும் என்று செய்துள்ளார்.
அந்த வழியாக சென்றவர்கள் ஈஷ்வரை இரவு 9 மணி அளவில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இரவு 1 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரமேஷ் மற்றும் அனிலை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications