பாலியல் துன்புறுத்தல் வழக்கு: 'டேரி' பச்சோரியிடம் 3வது முறையாக டெல்லி போலீஸ் துருவி துருவி விசாரணை!
டெல்லி: பாலியல் துன்புறுத்தல் புகார் தொடர்பாக 'டேரி' அமைப்பின் முன்னாள் தலைவர் பச்சோரியிடன் 3வது முறையாக டெல்லி போலீசார் நேற்று துருவித் துருவி விசாரணை நடத்தினர்.
ஐ.நா.வின் பருவநிலை மாறுதல்களுக்கான சர்வதேச குழுவின் தலைவராகவும் அரசு சாரா எரிசக்தி மற்றும் வளங்கள் மைய (TERI) தலைமை இயக்குனராகவும் பதவி வகித்தவர் ராஜேந்திரகுமார் பச்சோரி (வயது 74).

இவர் 2007 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை, அமெரிக்க துணை அதிபர் அல் கோருடன் சேர்ந்து பெற்றவரும் கூட. கடந்த 2013ம் ஆண்டு இறுதியில் பச்சோரியிடம் பணியாற்றத் தொடங்கிய ஆராய்ச்சி மாணவி ஒருவர், பச்சோரியின் பலவிதமான பாலியல் துன்புறுத்தல்களை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.
அவரின் தொல்லை தொடர்ந்ததால், பொறுமை இழந்த அந்த மாணவி அமைப்பின் மற்ற நிர்வாகிகளிடம் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார். அப்போதும் தொல்லை தொடரவே வேறு வழியின்றி டெல்லி லோதி காலனி போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து ராஜேந்திர பச்சோரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் தம் மீதான பாலியல் புகார்களை பச்சோரி மறுத்து வந்தார்.
இவ்வழக்கு தொடர்பாக போலீசார் தன்னை கைது செய்ய கூடாது என முன் ஜாமீன் வாங்கிய பச்சோரி, அமெரிக்காவில் உள்ள தனது உறவினர் இறந்து போனதாகவும், அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இதையேற்று டெல்லி நீதிமன்றம் நிபந்தனையின் பேரில் கடந்த 29-ம் தேதியில் இருந்து ஜூலை 9-ந் தேதி வரை 10 நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருக்க அனுமதி அளித்தது.
இந்நிலையில் இந்தியா திரும்பிய பச்சோரியிடம் நேற்று 3வது முறையாக மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. டெல்லி தெற்கு மாவட்ட போலீஸ் அதிகாரிகள் வீரேந்திர தலால், அஜய்சிங் நேகி ஆகியோர் பச்சோரியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணை 2 மணிநேரம் நடைபெற்றது. மொத்தம் 40 கேள்விகள் பச்சோரியிடம் கேட்கப்பட்டன.












Click it and Unblock the Notifications