30 குழந்தைகளைக் கொன்ற கொலைகாரனை கோர்ட்டில் வைத்து பளார் என அறைந்த மர்ம நபர்
டெல்லி: 17 வயதில் இருந்து 24 வயதுக்குள் 30 சின்னஞ்சிறு குழந்தைகளை பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற கொலைகாரனை இன்று டெல்லி நீதிமன்றத்தில் வைத்து மர்ம நபர் ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளி ரவீந்திர குமாரை 14 நாட்கள் திகார் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநில காஸ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த ரவீந்தர் குமார், டெல்லியில்தான் வசித்து வந்துள்ளார். 6 வயது சிறுமியைக் கொலை செய்த சம்பவத்தில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட அவனை விசாரணைக்காக நரேலா, பவானா, அலிபூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து சென்றனர் போலீஸார்.
இவ்வாறு அழைத்துச் செல்லும் போதுதான் இவரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமிகள் பற்றிய விவரம் தெரிய வந்தது.
2008ம் ஆண்டு முதல் ரவீந்திர குமார் இத்தகைய பாதகச் செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கலாம் என்று போலீஸ் இப்போது சந்தேகப்படுகிறது.
கடந்த ஆண்டு பேகம்பூரில் சிறுவன் ஒருவனை தாக்கியதாக ரவீந்தர் குமாரை போலீஸ் கைது செய்தது, இந்தச் சிறுவனை கடத்தி அவனது தொண்டையை கத்தியால் அறுத்து விட்டு ரவீந்தர் குமார் தப்பிச் சென்றுள்ளார். அந்தச் சிறுவன் இறந்து விட்டதாக குமார் தவறாக நினைத்துள்ளார். ஆனால் கட்டுமானத்தில் உள்ள கட்டடம் ஒன்றின் கழிவு நீர்த் தொட்டியில் ரத்தவிளாறாகக் கிடந்த சிறுவனை மீட்டனர் போலீஸார். ஆனால் அப்போது குமாரை விட்டுவிட்டது போலீஸ்.
இதன் பிறகு 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த புகார் தொடர்பாக ரவீந்தர் குமார் கடந்த வாரம் கைது செய்யப்பட்டான்.
விசாரணையில் இதுவரை 30 சிறுமிகளை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக குமார் ஒப்புகொண்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் விஜய் நகர், பவானா, நரேலா, அலிபூர், பேகம்பூர் கஞ்சாவாலா, சமய்பூர் பாதாலி, மற்றும் பல இடங்களில் சிறுமிகளை பலாத்காரம் செய்து கொன்றுள்ளான் ரவீந்திரகுமார்.
இந்த நிலையில் இன்று நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டான் ரவீந்திரகுமார். அவனது போலீஸ் காவலை 4 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று போலீசார் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர். இதை நிராகரித்த நீதிபதி, ரவீந்திர குமாரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் இந்த 7 நாட்கள் நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று போலீசாரிடம் கேள்வியெழுப்பினார்.
இதற்கு, போதுமான ஆதாரங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறோம் என்று பதில் சொன்ன போலீசார், ரவீந்திர குமார் மிகக் குறுகிய காலத்தில் 30 குழந்தைகளை கொலை செய்துள்ளதைக் குறிப்பிட்டனர்.
இந்நிலையில், நீதிமன்றத்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்ட குமாரை நெருங்கிய சில மர்ம நபர்கள் அவனைத் தாக்க முயற்சித்தனர். அதில் ஒருவர் அவனது கன்னத்தில் பளார் என்று அறைந்து தனது கோபத்தை தீர்த்துக் கொண்டார். அவர்களை போலீசார் விலக்கிவிட்டு குமாரை பத்திரமாக கொண்டு சென்றனர். விரைவில் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.