அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத தினகரன் எப்படி அதிமுக வேட்பாளர்? மாஃபா பாண்டியன் அதிரடி
அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத டிடிவி தினகரன் எப்படி அதிமுகவின் வேட்பாளராக அறிவிக்க முடியும் என்று ஓபிஎஸ் அணி மாஃபா பாண்டியராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி: சசிகலா ஆதரவு அணியில் உள்ள டிடிவி தினகரன் ஆர்.கே. நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது சட்ட விரோதமானது என்று ஓபிஎஸ் அணியில் உள்ள மாஃபா பாண்டியராஜன் டெல்லியில் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைந்ததையடுத்து காலியான ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் பரபரப்பு தொற்றிக் கொண்டது. குறிப்பாக அதிமுகவில் இரண்டு அணிகளாக பிரிந்து சண்டையிட்டு வரும் ஓபிஎஸ் மற்றும் சசிகலா அணியினர் பரஸ்பர குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.
தாங்கள் உண்மையான அதிமுகவினர் என்று ஓபிஎஸ் அணியினர் சொல்லி வரும் வேளையில், அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆர்.கே. நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தினகரன் அதிமுக உறுப்பினரா?
இதுகுறித்து டெல்லியில் மாஃபா பாண்டியராஜன் கூறியதாவது: டிடிவி தினகரன் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முறையற்றது. அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. 2011ல் ஜெயலலிதா டிடிவி தினகரனை கட்சியில் இருந்து வெளியே அனுப்பியதற்கு பின்னர் பிப்ரவரி முதல் வாரத்தில் அவர் மன்னிப்பு கடிதம் தந்ததாகவும் அந்த மன்னிப்பு கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அவர் அளித்துள்ள மன்னிப்புக் கடிதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
முறையற்ற செயல்
அதனால் அவர் துணைப் பொதுச் செயலாளர் என்பது யாருமே அங்கீகாரம் கொடுக்காத ஒரு விஷயம். குறிப்பாக தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கவில்லை. அதனால் அவர், அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முறையற்றது. சட்ட பூர்வமான நடவடிக்கை அல்ல.
பெரா குற்றவாளி
குறிப்பாக பெரா வழக்கின் குற்றவாளி தினகரன். இதில் வேட்பாளராக அறிவிப்பது ஜெயலலிதாவின் நினைவிற்கு செய்யும் துரோகம். இது மிகப் பெரிய தவறு. ஜெயலலிதாவின் நினைவிற்கு செய்யும் அஞ்சலியாக இதனை ஏற்க முடியாது.
“அம்மா” வேட்பாளர்
மேலும், அதிமுகவின் உண்மையான வேட்பாளரை ஓபிஎஸ் அறிவிப்பார். அந்த நபரே ஆர்.கே. நகரில் போட்டியிட்டு வெற்றி பெறுவார். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.
இரட்டை இலைக்காக…
இதனிடையே ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தங்கள் அணிக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்த ஓபிஎஸ் அணியினர் டெல்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதியை சந்தித்து சசிகலா பொதுச் செயலாளர் நியமிக்கப்பட்டது செல்லாது என்பது குறித்தும் இரட்டை இலை குறித்தும் விளக்கினார் ஓபிஎஸ்.