ஜி.எஸ்.டி வரி மாற்றத்தால் சீக்கிரமே வந்துவிட்டது தீபாவளி... சொல்வது பிரதமர் மோடி!
ஜி.எஸ்.டி வரி விதி மற்றும் அதில் வந்திருக்கும் மாற்றங்கள் காரணமாக மக்களுக்கு சீக்கிரமே தீபாவளி வந்துவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜாம்நகர்: குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள துர்காதீஷ் கோவிலுக்கு வழிபாடு நடத்த சென்றிருந்தார் பிரதமர் மோடி. இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றிருக்கும் இவர் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு குறித்து மக்கள் முன்னிலையில் பேசினார். இதில் அவர் ''ஜி.எஸ்.டி வரி விதி மற்றும் அதில் வந்திருக்கும் மாற்றங்கள் காரணமாக மக்களுக்கு சீக்கிரமே தீபாவளி வந்துவிட்டது'' என தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். பிரதமராக மோடி பதவி ஏற்றப்பின் முதல்முறையாக தான் பிறந்த இடமான வாத் நகருக்கு இன்று செல்ல இருக்கிறார். குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள துர்காதீஷ் கோவிலுக்கு வழிபாடு நடத்தி அங்கிருந்து வாத் நகருக்கு செல்ல திட்டமிட்டிருந்தார் மோடி. கோவிலில் வழிபாடு நடத்திய மோடி மக்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி குறித்து பேசிய மோடி " ஜி.எஸ்.டி அறிமுகத்தால் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது, ஜி.எஸ்.டி யில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக மக்களுக்கு இப்போதே தீபாவளி வந்து விட்டது. மக்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர் '' என்றார் .
இந்தியப் பொருளாதாரம் குறித்து மேலும் பேசிய அவர் " இந்தியாவில் பெரும் பொருளாதார மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன . இப்போது இருக்கும் இந்த சிறிய பொருளாதார மந்த நிலை விரைவிலேயே சரி செய்யப்படும். நம் மக்கள் யாரும் வறுமையில் வாழ விரும்ப மாட்டார்கள் . அவர்கள் வறுமையை போக்குவதே என் முக்கிய கடமை '' என்று கூறினார்.
இந்த இரண்டு நாள் பயணத்தில் பிரதமர் மோடி , அவரது பிறந்த ஊர், துர்கா தீவிற்கான பாலம் திறப்பு, ராஜ்கோட் விமான நிலைய அடிக்கல் நாட்டு விழா என நிறைய நிகழ்வுகளில் கலந்து கொள்ள இருக்கிறார். அவர் செல்லும் அனைத்து இடங்களிலும் மக்களிடம் உரையாற்றுவார் எனக் கூறப்பட்டுள்ளது.