திருப்பதி ஏழுமலையானுக்கு 24 மணி நேரத்தில் ரூ 97 கோடி நன்கொடை! 2500 பேர் போட்டி போட்டு கொடுத்தது ஏன்?
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரே நாளில் ரூ 97 கோடிக்கு நன்கொடை குவிந்துள்ளது. பக்தர்கள் பலர் போட்டி போட்டுக் கொண்டு நன்கொடையை கொடுத்தது ஏன் என்பதை பார்க்கலாம்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் தரிசனம் செய்கிறார்கள். அது போல் பண்டிகை தினங்களில் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

திருப்பதி என்றாலே லட்டு, மொட்டைக்கு மத்தியில் உண்டியல் காணிக்கைதான் பலருக்கும் நினைவுக்கு வரும். பலர் இன்றளவும் சிறிய உண்டியலில் ஏழுமலையானுக்கு என காணிக்கை சேர்த்து, அதை திருமலைக்குச் செல்லும் போது எடுத்துச் சென்று உண்டியலில் செலுத்துகிறார்கள்.
அது போல் தங்கம், வைரம், வெள்ளி, சொத்து பத்திரம், வெளிநாட்டு கரன்சி என உண்டியலில் செலுத்துகிறார்கள். இந்த உண்டியல் காணிக்கை அன்றாடம் எண்ணப்பட்டு வருகிறது. அந்த பணம் தேவஸ்தான கருவூலத்தில் செலுத்தப்பட்டு கோயில் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஒரே நாளில் 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ரூ 96.98 கோடி அளவுக்கு காணிக்கையை வழங்கினர். கோயில் டேட்டாவை பொருத்தமட்டில் 1.97 லட்சம் பக்தர்கல் நன்கொடையாளர்களாக உள்ளனர்.
இவர்களில் 1.5 லட்சம் பேர் ஒரு லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் அளித்துள்ளனர். 22 ஆயிரம் பேர் 10 லட்சத்துக்கும் அதிகமாக நன்கொடை கொடுத்துள்ளனர். கடந்த 4 மாதங்களில் மட்டும் 10 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு நன்கொடை கொடுக்கும் பக்தர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தரிசனத்தில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.
சிறப்பு நுழைவு தரிசனம், கருவறைக்கு அருகே சுபதம் வழியாக அனுமதி, பிரேக் அப் தரிசனம் சுப்ரபாத சேவை, கல்யாண உற்சவம் ஆகியவற்றில் பங்கேற்பது, தங்கும் விடுதிகள், லட்டு, தங்கம், வெள்ளி நாணயங்கள் என பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன.
இந்த நிலையில் நன்கொடை விவகாரங்களில் திருமலை திருப்பதி அண்மையில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தது. அதன்படி தனி நபர்களுக்கு 20 ஆண்டுகளுக்கும், அறக்கட்டளைகளுக்கு 15 ஆண்டுகளுக்கு மட்டுமே நன்கொடையாளர் சலுகைகள் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதனால் பழைய சலுகைகளை தக்க வைத்துக் கொள்ள நேற்று முன் தினம் ஏராளமானோர் போட்டி போட்டிக் கொண்டு நன்கொடைகளை அளித்தனர். அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நன்கொடையாக ரூ 96.98 கோடி வசூலானது. அதில் 2460 பேர் நன்கொடை அளித்தனர்.
அவரக்ளில் 1212 பேர் 1 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் வரையிலும், 1246 பேர் 10 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரையிலும் நன்கொடை அளித்தனர். இரு பக்தர்கள் 1 கோடிக்கும் அதிகமான நன்கொடைகளை வழங்கியதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications