கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.. 3 அடி உயர டாக்டரின் வெற்றி பயணம்.. எம்பிபிஎஸ் படித்தது எப்படி?
காந்திநகர்: குஜராத் மாநிலம் காந்திநகரில் 3 அடி உயரத்தில் டாக்டர் கணேஷ் பாரையா என்பவர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால் அவர் இந்த இடத்திற்கு அத்தனை எளிதில் வந்துவிடவில்லை.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கணேஷ் பாரையா. அவருக்கு வயது 23. ஆனால் இவர் 3 அடி உயரம் கொண்டவர், பிறக்கும் போதே குள்ளத்தன்மையுடன் பிறந்தார். இவரின் உடலில் 72 சதவீத லோகோமோட்டிவ் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

இவர் குள்ளமாக இருப்பதால் பள்ளி படிப்பில் சக மாணவர்களை போல் இவரால் சகஜமாக இருக்க முடியவில்லை. பலர் இவரை கேலி கிண்டல் செய்துள்ளனர். இருந்தும் அத்தனை ஏளனங்களையும் தாங்கிக் கொண்டார் கணேஷ்.
இவருடைய லட்சியமே மருத்துவராவது. இதனால் தனது கனவை நனவாக்க வெற்றிகரமாக படித்து முடித்திருந்தார். பின்னர் நீட் தேர்வு எழுதி அதிலும் வென்றார். ஆனால் இவருடைய உயரத்தை காரணமாக கூறி இந்திய மருத்துவ கவுன்சில் எம்பிபிஎஸ் படிக்கத் தகுதியற்றவர் என கூறியது. இதை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் கணேஷ் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு 2 ஆண்டுகள் நடந்தும் கணேஷுக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து கணேஷ் பாரையா உச்சநீதிமன்றத்தை நாடினார். அங்கு அவர் எம்பிபிஎஸ் படிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து 2019ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் பட்டப்படிப்பில் சேர்ந்தார்.
தற்போது படிப்பை நல்லபடியாக முடித்துக் கொண்டு பாவ்நகர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றினார். தனது உரிமைக்காக அறவழியில் போராடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதை இவர் நிரூபித்துள்ளார். இதுகுறித்து கணேஷ் பாரையா கூறியிருப்பதாவது: நான் பிளஸ் 2 படித்துவிட்டு நீட் தேர்விலும் வெற்றி பெற்றேன்.
ஆனால் எம்பிபிஎஸ் படிக்க இந்திய மருத்துவ கவுன்சிலில் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. உயரம் குறைவாக இருப்பதால் என்னால் அவசர கேஸ்களை கவனிக்க முடியாது என காரணத்தை கூறினர். இதையடுத்து நான் மருத்துவக் கல்லூரி முதல்வரை சந்தித்து பேசினேன். அவர்கள்தான் என்னை பாவ்நகர் ஆட்சியை சந்திக்குமாறு அறிவுறுத்தினர்.
இதையடுத்து அவருடைய ஆலோசனையின் பேரில் நான் குஜராத் ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தேன். அங்கு எனது வழக்கு தோல்வி அடைந்ததால் உச்சநீதிமன்றத்திற்கு சென்றோம். அதில் வென்று 2019 ஆம் ஆண்டு மருத்துவ படிப்பை முடித்தேன். மருத்துவமனையில் என்னை முதலில் பார்க்கும் நோயாளிகள் நான் டாக்டரா என்பதில் குழப்பமடைவார்கள். போக போக எனது சிகிச்சையை பார்த்துவிட்டு எனக்கு உரிய மரியாதை கொடுப்பார்கள். இவ்வாறு கணேஷ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications