நான் நல்லாருக்கேன்.. மனநல சோதனைக்கு மறுத்து டீ, காபி கொடுத்து டாக்டர்களை திருப்பி அனுப்பிய கர்ணன்!
தான் சரியான மனநிலையில் இருப்பதாக மருத்துவ குழுவிடம் கர்ணன் தெரிவித்ததோடு, மனநல பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்து காவல்துறையினரிடம் கைப்பட கடிதம் அளித்தார்.
கொல்கத்தா: நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை செய்ய டாக்டர்கள் குழு அவரது வீட்டுக்கு விரைந்தது. ஆனால் அவர்களை திருப்பியனுப்பிவிட்டார் கர்ணன்.
நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார் கூறியதற்காக உச்சநீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உள்ளாகியுள்ளவர் கொல்கத்தா ஹைகோர்ட் நீதிபதியான கர்ணன்.

நீதிபதிகள் குறித்த பேச்சு, நடவடிக்கையை தொடர்ந்து, கர்ணனுக்கு மனநல பரிசோதனை செய்ய கடந்த 1ம்தேதி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மேலும், மன நல பரிசோதனை முடிவை வரும் 8ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு பதிலடியாக கர்ணன் ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 7 பேருக்குத்தான் மன நல பரிசோதனை செய்ய வேண்டும். எய்ம்ஸ் மன நல மருத்துவர்கள் கொண்ட குழு இந்த சோதனை நடத்த வேண்டும். மேலும் வரும் 5 ம் தேதி எனது கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என உத்தரவில் கூறியிருந்தார். மேலும் இந்த உத்தரவை வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கிறேன் என்றும் நீதிபதி கர்ணன் கூறியுள்ளார்.
மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மனநல பரிசோதனை நடத்த நான் சம்மதிக்க மாட்டேன் என்று கர்ணன் திட்டவட்டமாக கூறியிருந்தார்.
இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று, டாக்டர்கள் குழு இன்று கர்ணன் வீட்டுக்கு சென்றது.. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேற்கு வங்க மாநில டிஜிபி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உரிய வகையில் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
வந்திருந்த மருத்துவர்களுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் காபி, டீ வழங்கி உபசரித்த கர்ணன், மனநல பரிசோதனைக்கு உட்பட முடியாது என கூறி அவர்கள் திருப்பியனுப்பி விட்டார்.
தான் சரியான மனநிலையில் இருப்பதாக மருத்துவ குழுவிடம் கர்ணன் தெரிவித்ததோடு, மனநல பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்து காவல்துறையினரிடம் கைப்பட கடிதம் அளித்தார். நிருபர்களிடம் கர்ணன் கூறுகையில், நீதித்துறையின் தீவிரவாதிகள் என்று, குறிப்பிட்ட 7 நீதிபதிகளை விமர்சனம் செய்தார்.












Click it and Unblock the Notifications