பகல் கொள்ளையா இருக்கே.. சென்னை டூ அகமதாபாத் ரூ.28,000! உலக கோப்பை பைனல்.. எகிறிய விமான கட்டணம்
அகமதாபாத்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நாளை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதனை காண இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து மட்டுமல்லாது ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் ரசிகர்கள் அகமதாபாத்தில் குவிந்து வருகின்றனர். எனவே தங்கும் ரூம்களின் கட்டணங்கள், விமான பயணம் கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதி போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த மைதானம் உலகில் மிகப்பெரியதாகும். இதில் ஒரே நேரத்தில் சுமார் 1.32 லட்சம் மக்கள் போட்டியை கண்டு ரசிக்க முடியும். எனவே போட்டியை காண இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் ரசிகர்கள் அகமதாபாத்தில் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக ஓட்டல்களில் ரூம்களுக்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டிருக்கிறது.

தேவை அதிகரித்துள்ளதால் விலையும் எக்கச்சக்கமாக உயர்ந்திருக்கிறது. வழக்கமான நாட்களில் நட்சத்திர ஓட்டலில் தங்குவதற்கு ரூ.12 ஆயிரம் வரை செலவாகும். ஆனால் தற்போது ரூ.25 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. சாதாரண ஓட்டல்களிலும் தங்கும் அறைகளுக்கான கட்டணம் 10 மடங்கு உயர்ந்திருக்கிறது. அதேபோல வாடகை கார்கள், மதுபானங்களின் தேவையும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக விமான பயண கட்டணங்கள் பகல் கொள்ளையாக மாறியுள்ளன. சாதாரண நாட்களில் சென்னை டூ அகமதாபாத்திற்கு ரூ.12,000 முதல் 16,000 வரை விமான கட்டணம் இருக்கும். ஆனால் தற்போது இது ரூ.28 ஆயிரமாக அதிகரித்திருக்கிறது. ஹைதராபாத்திலிருந்து அகமதாபாத்திருக்கு ரூ.30 ஆயிரமும், பெங்களூரிலிருந்து அகமதாபாத்திற்கு ரூ.29 ஆயிரமும், டெல்லி டூ ஹைதராபாத் ரூ.22 ஆயிரம் என டிக்கெட் விலை உயர்ந்திருக்கிறது.
அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியை காண பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ், 8க்கும் மேற்பட்ட மாநில முதலமைச்சர்கள், அமித்ஷா, அனுராக் தாக்கூர் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள், தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உச்சநீதிமன்ற, குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள், முகேஷ் அம்பானி, லட்சுமி மிட்டல் உள்ளிட்ட தொழிலதிபர்கள், அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் என பலரும் நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு வருகை தரவுள்ளனர். எனவே பாதுகாப்பு பணிகளுக்காக மட்டும் சுமார் 6000 பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுகின்றனர்.
போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதால் அகமதாபாத் நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் இந்த போட்டியை நேரலையில் காண சென்னை மெரினா கடற்கரையிலும், பெசன்ட் நகர் கடற்கரையிலும் பெரிய எல்இடி திரை அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications