"கோட் சூட் போட்டு பகலிலேயே திருட வருகிறார்கள்..." நில ஆர்ஜித விவகாரத்தில் ராகுல் பாய்ச்சல்!!
டெல்லி: விவசாயிகளிடம் இருந்து லட்சம் ரூபாய்க்கு நிலத்தை வாங்கி கார்ப்பரேட்டுகளுக்கு பல கோடிகளுக்கு விற்பனை செய்து கொள்ளையடிக்கிறது மத்திய அரசு என்று நில ஆர்ஜித மசோதா குறித்து லோக்சபாவில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நில ஆர்ஜித மசோதா, நெட் நியூட்டிராலிட்டி விவகாரங்களில் மத்திய அரசை வறுத்தெடுத்தவர் ராகுல் காந்தி. அதுவும் 56 நாட்கள் அரசியல் லீவ் போட்டுவிட்டு நாடு திரும்பிய பின்னர் ராகுல் நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சுகள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

இன்றும் நாடாளுமன்றத்தில் ராகுல் புயலைக் கிளப்பினார். நில ஆர்ஜித மசோதா குறித்து இன்று ராகுல் பேசியதாவது:
நாங்கள் நில ஆர்ஜித மசோதாவை கொண்டு வர 2 ஆண்டுகாலம் எடுத்துக் கொண்டோம். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசோ குறுகிய காலத்திலேயே அந்த மசோதாவை கொலை செய்துவிட்டது.
எங்களைப் பொறுத்தவரை நாங்கள் நிலத்தை கையகப்படுத்தும் போது விவசாயிகளின் நலனைப் பற்றி அக்கறை கொண்டோம்.. ஆனால் நீங்களோ நிலத்துக்கு உரிமையாளரை கேட்காமலேயே நிலத்தை கையகப்படுத்துகிறீர்கள்... உங்களுக்கு சமூக மதிப்பீடுகளை பற்றிய கவலை இல்லை.. ஆனால் எங்களுக்கு அப்படியான ஒரு கவலை இருந்தது.
நிலத்தை கையகப்படுத்தி 5 ஆண்டுகளில் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தாவிட்டால் நிலத்தை விவசாயிகளிடமே கொடுத்துவிடுவதுதான் எங்கள் ஆட்சியின் நில ஆர்ஜித மசோதா.. ஆனால் இதனை நிராகரிக்கிறது உங்களது ஆட்சி மசோதா...
நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் 40% இடம் காலியாக உள்ளது. நீங்கள் விவசாயிகளிடம் இருந்து லட்சத்துக்கு நிலத்தை வாங்கி கார்ப்பரேட்டுகளுக்கு கோடிக்கணக்கில் விற்பனை செய்து பகல் கொள்ளையடிக்க முயற்சிக்கிறீர்கள்...
முன்பெல்லாம் இரவு நேரத்தில்தான் திருடர்கள் வருவார்கள்.. இப்போது நிலத்தை கொள்ளையடிக்க கோட் சூட் போட்டுக் கொண்டு பட்ட பகலிலேயே வருகிறார்கள்..
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.












Click it and Unblock the Notifications