இரண்டாக பிரிந்த ஆந்திரா... பொருளாதாரத்தில் எதிர் நோக்கியுள்ள சவால்கள்
ஹைதராபாத்: தெலுங்கானா, சீமாந்திரா என ஆந்திர மாநிலம் இரண்டாக பிளவு பட்டதன் மூலம் அதன் பொருளாதார நிலையும் பெரும் மாறுதலைச் சந்திக்க உள்ளதாக நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதன்படி, புதிய மாநிலமான தெலுங்கானா தொழில் மற்றும் சேவை துறையால் பொருளாதார வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.
ஆந்திரமாநிலத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானாவை தனி மாநிலமாக்க வேண்டும் எனக் கடந்தப் பல ஆண்டுகளாக அங்கு ஒருபிரிவினர் போராடி வந்தனர். அதன் பலனாக கடந்த வாரம் நாட்டின் 29வது மாநிலமாக தெலங்கானா உருவானது.
ஆந்திராவிற்கு புதிய தலைநகர் உருவாகும் வரை ஹைதராபாத் நகரமே இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக இருக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக உருவான தெலங்கானா மாநில பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் துறை மற்றும் சேவை துறை முதுகெலும்பாக இருக்கும் என கருதப்படுகிறது.

ஆந்திராவின் பெருமைகள்...
ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்த போது அம்மாநிலம் பரப்பளவில் இந்தியாவிலேயே நான்காவது பெரிய மாநிலமாகவும், மக்கள் தொகையில் ஐந்தாவது இடத்திலும் இருந்தது. அதேபோல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், தனிநபர் வருமானத்தில் 11வது இடத்திலும் இருந்தது.

தனிநபர் வருமானம்...
கடந்த 2012 -13ம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ 7 லட்சத்து 38 ஆயிரத்து நானூற்று தொண்ணூற்றேழு கோடியாக இருந்தது. அதேபோல், தனிநபர் வருமானமும் ரூ 77 ஆயிரத்து இருநூற்றி இருபத்தேழாக கணக்கிடப்பட்டது.

தெலுங்கானா உதயம்...
ஆனால், இந்த வரலாறு எல்லாம் கடந்த வாரம் அதாவது ஜூன் 2ம் தேதியோடு முடிவுக்கு வந்து விட்டதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். காரணம் அன்று ஆந்திராவில் இருந்து பிரிந்த தெலுங்கானா இந்தியாவின் 29வது மாநிலமாக அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டிற்கு வந்தது.

புள்ளி விவரங்கள்...
10 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த புதிய மாநிலத்தில் இந்த காலக்கட்டத்தில் மாநிலத்தின் மொத்த உற்பத்தி கடந்த 2004,05 மற்றும் 2012,13 நிதியாண்டில் சராசரியாக 16.05 சதவீதமாக இருந்துள்ளது என ஆந்திர அரசு அதிகாரிகள் தயாரித்த புள்ளி விவரங்கள் மூலம் தெரிந்துள்ளது. மொத்த உற்பத்தி 2012,13ல் ரூ.3,35,018 கோடி. இதற்கு முந்தைய 2011,12ல் இது 2,95,767 கோடி ஆகும்.

சேவை துறைகள்...
இத்துடன் ஒப்பிடும்போது மாநிலத்தின் மொத்த உற்பத்தி 13.26 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘2012,13 நிதியாண்டில் சேவை துறைகள் மூலமான பங்களிப்பு ரூ.1.81 லட்சம் கோடி. இது தற்போதைய மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 54 சதவீதம்.

தொழில் துறை...
இதற்கு அடுத்ததாக தொழில் துறைகள் மூலமான பங்களிப்பு ரூ.96,000 கோடி. இது 28.8 சதவீதம். 3வதாக விவசாயத்துறை மூலமான பங்களிப்பு ரூ.57,000 கோடி. இது மாநில மொத்த உற்பத்தியில் 17.2 சதவீதமாக உள்ளது‘ என தெரிவித்துள்ளார்.

அபரிமித வளர்ச்சி...
மேலும், அரசுக்கு சேவை துறைகள் மூலமான வருவாயில் 95 சதவீதம் தலைநகர் ஆந்திரா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளின் மூலம் வந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். தெலுங்கானாவின் தனி நபர் வருவாய் கடந்த 2004,05ல் ரூ.24,409 ஆக இருந்தது. இது அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து 2012,13ல் ரூ.83,020 ஆகியுள்ளது.

பட்ஜெட் உபரி...
அதுபோல், இந்த புதிய அரசின் வருவாய் பட்ஜெட் உபரி ரூ.4,000 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆந்திரா பிரிக்கப்படாதபோது, பட்ஜெட்டில் உபரியாக ரூ.18 ஆயிரத்து 600 கோடி இருந்தது.

மின் பற்றாக்குறை...
இருப்பினும், மின்சார பற்றாக்குறை காரணமாக வெளியில் இருந்து மின்சாரம் வாங்க வேண்டிய தேவை இந்த புதிய மாநிலத்துக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குவதற்கு அதிகம் செலவிட வேண்டி வரும். மின்சார பற்றாக்குறையை ஈடுசெய்தால் மட்டுமே தொழில் துறை உற்பத்தி பெருகும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹைதரபாத்தின் பங்கு...
அதேபோல், தெலுங்கானாவின் மொத்த வருமானத்தில் ஹைதராபாத்திற்கும் முக்கியப் பங்கு உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2012-13ம் ஆண்டில் ஆந்திராவில் வரி மூலம் கிடைத்த வருவாயான ரூ 51 ஆயிரத்து நானூற்று நாற்பத்தொன்று கோடியில், சுமார் 11 ஆயிரத்து எழுநூற்று முப்பது கோடி ரூபாய் ஹைதராபாத்தில் இருந்து கிடைக்கப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications