சேகர் ரெட்டிக்கு சொந்தமான 30 கிலோ தங்கம் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
சேகர் ரெட்டிக்கு சொந்தமான 30 கிலோ தங்கத்தை அமலாக்கத் துறை முடக்கியது.
டெல்லி: மணல் மாபியா சேகர் ரெட்டிக்கு சொந்தமான ரூ.8.5 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கத்தை அமலாக்கத் துறை முடக்கியது.
வேலூரை சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்து ரூ. 147 கோடியும், 177 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ரூ. 24 கோடிக்கு புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

சேகர் ரெட்டி மற்றும் அவரின் கூட்டாளிகளான பிரேம்குமார், சீனிவாசலு, திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சிபிஐ கைது செய்தது.
சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகிய மூவருக்கும் மார்ச் மாதம் 17-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்தனர். இதனைத் தொடர்ந்து, சேகர் ரெட்டியை அமலாக்கத்துறையினர் திடீரென கைது செய்தனர்.
அவருடன், சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் மனு செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவர்கள் மூவருக்கும் ஜாமீன் வழங்கியதை அடுத்து கடந்த மே 15-ஆம் தேதி அவர்கள் 3 பேரும் புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சேகர் ரெட்டிக்கு சொந்தமான ரூ.8.57 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை அமலாக்கத் துறை முடக்கியது.












Click it and Unblock the Notifications