விதியை மாறி பொது செயலாளர்- சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ், பெங்களூர் சிறைக்கு அனுப்பியது
பொதுச்செயலர் பதவி தொடர்பாக சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி: அதிமுகவின் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் தர சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ் சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் சிறைச்சாலை முகவரிக்கே அனுப்பப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக பொதுக் குழுவில் இடைக்கால பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டார். இதற்கு அதிமுக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் அதிமுக சசிகலா, ஓபிஎஸ் என இரண்டு அணிகளாகப் பிளவுபட்டது. அத்துடன் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணியின் 10 எம்.பிக்கள் நேற்று தேர்தல் ஆணையத்திடம் ஒரு மனுவை அளித்தனர்.
ராஜ்யசபா எம்பி மைத்ரேயன் தலைமையில் அதிமுக எம்பிக்கள் 10 பேர் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்த இக்குழுவினர், அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலர் பதவி என்பது இல்லை. ஆகையால் சசிகலா பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.
இந்த மனுவை ஏற்று சசிகலாவுக்கு இன்று தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ஓபிஎஸ் அணியினரின் புகார் குறித்து வரும் 28-ந் தேதிக்குள் விளக்கம் தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸுக்கு பதில் தராவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.