சோனியா மருமகனின் சட்ட விரோத நில டீலிங்கிற்கு ஹரியானா அரசு உடந்தை: மோடி குற்றச்சாட்டு
சண்டீகர்: சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வத்ரா மற்றும் டிஎல்எப் நிறுவனங்கள் நடுவேயான நில வர்த்தகத்தை அவசர கதியில் ஹரியானா அரசு நிறைவேற்றிக் கொடுத்துள்ளது என்ற பகீர் குற்றச்சாட்டை முன்வைத்த பிரதமர் நரேந்திர மோடி, இதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கைவிடுத்தார்.
ஹரியானா மாநில சட்டசபைக்கு வரும் 15ம்தேதி தேர்தல் நடைபெறுகிறது. அம்மாநிலத்தின் ஹிசார் பகுதியில் இன்று பாஜகவுக்கு ஆதரவு திரட்டி, மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், "புபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான ஹரியானா அரசு, ராபர்ட் வத்ராவுக்கு உடந்தையாக செயல்படுகிறது. டிஎல்எப் நிறுவனத்துடனான வத்ராவின் டீலிங்குகளுக்கு அவசர கதியில் ஹரியானா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஏனெனில், தேர்தல் முடிந்து ஹரியானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், சட்ட விரோத டீலிங்குகளுக்கு அனுமதி கிடைக்காது என்று ஹூடா அரசுக்கு நன்கு தெரிந்துள்ளது. எனவேதான், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், ஹூடா அரசு இதுபோன்ற முடிவை எடுத்துள்ளது. காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களிடமிருந்து முதல்வர் ஹூடாவுக்கு வந்த நெருக்கடிகளால் அவர் இம்முடிவை எடுத்திருப்பார் என்று கருதுகிறேன்.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் உரிய கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக ஹரியானா முதல்வர் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.
ஹரியானாவின் ஹூடா தலைமையிலான அரசும், காங்கிரஸ் கட்சியும், தங்களது தோல்வியை முன்கூட்டியே ஒப்புக்கொண்டு விட்டதை, இந்த வெட்கங்கெட்ட செயல் உறுதிப்படுத்திவிட்டது. இவ்வாறு மோடி பேசினார்.
குர்கான் பகுதியில் ரூ.58 கோடி மதிப்புக்கு சட்ட விரோத நில டீலிங் நடந்துள்ளதாக குற்றம்சாட்டி கடந்த 2012, அக்டோபர் மாதத்தில், மூத்த ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா , அந்த வர்த்தகத்தை ரத்து செய்தார். ஆனால் திடீரென இப்போது மாநில அரசு அந்த வர்த்தகத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதையே மோடி குற்றச்சாட்டாக முன்வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications