சர்ச்சை பாதிரியார் பென்னி ஹின் மீண்டும் பெங்களூர் வருகிறார்: பாஜக கடும் எதிர்ப்பு

அமெரிக்க பாதிரியாரான பென்னி ஹின் நோய்களை குணப்படுத்துவது, அதிசயங்களை நிகழ்த்துவதற்கு பெயர் போனவர். அவர் கடந்த 2005ம் ஆண்டு பெங்களூர் வந்தார். அவர் தனது நிகழ்ச்சிகள் மூலம் இந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்ற முயல்கிறார் என்று குற்றம் சாட்டி அவர் மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 5 வழக்குகள் தொடரப்பட்டன. அவர் பெங்களூர் வந்தபோது பல இடங்களில் தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. மேலும் நூற்றுக்கணக்கான மாநில அரசு பேருந்துகள் சேதமடைந்தன.
இந்நிலையில் வரும் 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் வடக்கு பெங்களூரில் உள்ள ஹெப்பாலில் இருக்கும் பெத்தேல் ஏஜி தேவாலயத்தில் நடக்கும் பிரார்த்தனை மாநாட்டில் பென்னி ஹின் சிறப்பு பேச்சாளராக கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கான நுழைவுக் கட்டணம் ரூ. 850 ஆகும்.
இந்நிலையில் பென்னியின் வருகைக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து பாஜக தலைவரும், முன்னாள் கர்நாடக அமைச்சருமான எஸ். சுரேஷ் குமார் கூறுகையில்,
2005ம் ஆண்டில் பென்னி பெங்களூர் வந்தார். அப்போது காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. துணை முதல்வராக இருந்த சித்தராமையாக பென்னியின் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். தற்போது அவர் முதல்வராக உள்ளார். ஆனால் இப்போது மட்டும் பென்னியின் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்துள்ளார். அவர் அமைதியாக இருப்பதன் காரணம் என்ன என்று தான் நாங்கள் கேட்கிறோம். பென்னியின் நிகழ்ச்சிக்கு அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications