சிபிஎம்க்கு ஓட்டுப் போட்டால் மத்தியில் ஆட்சி மாறி விடும்...: கேரளாவில் ராகுல் எச்சரிக்கை
திருவனந்தபுரம்: கேரளாவில் கம்யூனிஸ்டுகளுக்கு வாக்களித்தீர்களானால் மத்தியில் வேறு ஆட்சி அமைய வழி வகுத்து விடும் என மறைமுகமாக காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளிக்கும் படிக் கேட்டுக் கொண்டார் ராகுல்.
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கேரளாவில் ஆற்றிங்கல், செங்கனூர், காசர்கோடு, ஆகிய இடங்களில் நேற்று பிரசார பொதுக்கூட்டங்கள் நடந்தது. அப்போது பலத்த மழையும் பொருட்படுத்தாது தங்களது வேட்பாளார்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்.

தனது பிரச்சார உரையில் பாஜக பிரதமர் வேட்பாளார் நரேந்திரமோடியையோ அல்லது மற்ற எதிர்க்கட்சி தலைவர்களையோ பெயர் சொல்லி நேரடியாக தாக்கி பேசாமல் மறைமுகமாகவே அவர்களை குறை கூறினார் ராகுல்.
மேலும், அவர் தனது பிரச்சாரத்தில் பேசியதாவது :-
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும். எனவே கருத்து கணிப்புகளை மக்கள் நம்ம வேண்டாம். கேரளாவில் கம்யூனிஸ்டுகளுக்கு ஓட்டுபோட்டால் அது மத்தியில் வேறு கட்சி ஆட்சி அமைக்க வழிவகுத்து விடும்.
எனவே காங்கிரசுக்கு உங்கள் ஓட்டுகளை வழங்குங்கள். யாரையும் பாதிக்காத வகையில் கஸ்தூரிரங்கன் அறிக்கை அமுல்படுத்தப்படும். ஏழைகளுக்கு தரமான மருத்துவ வசதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவனந்தபுரம் தொகுதியை சேர்ந்த சசிதரூர் இந்த தொகுதி வளர்ச்சிக்காக பாடுபட்டு உள்ளார். அவர் வெற்றி உறுதி. அவருக்கு மீண்டும் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும். குஜராத்தைவிட கேரளா சிறந்த மாநிலமாக உள்ளது. இங்கு அதிகம் படித்தவர்கள் உள்ளனர்' என இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications