குஜராத் அரச குடும்ப வாரிசாக இந்திய கிரிக்கெட் வீரர் தேர்வு! அஜய் ஜடேஜாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்
காந்திநகர்: குஜராத்தின் ஜாம் நகர் அரச குடும்ப வாரிசாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் அஜய் ஜடேஜா அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் பலகோடி மதிப்பிலான சொத்துக்கு அஜய் ஜடேஜா சொந்தக்காரராக மாற உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா (வயது 53). இவர் குஜராத்தை சேர்ந்தவர். பேட்ஸ்மேன்னான இவர் கடந்த 1992ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடினார். மொத்தம் 196 ஒருநாள் மற்றும் 15 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இவர் சூதாட்ட சர்ச்சையில் சிக்கினார். அதன்பிறகு ஓய்வு பெற்ற அஜய் ஜடேஜா பாலிவுட் திரைப்படங்களில் நடித்தார். பிறகு கிரிக்கெட் வர்ணணையாளராக வலம் வந்தார். கடந்த ஆண்டு நடந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டியின்போது ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.
அஜய் ஜடேஜாவை பொறுத்தவரை அவர் அரச குடும்பத்தை சேர்ந்தவர். குஜராத் மாநிலம் ஜாம் நகர் (இதற்கு முன்பு நவா நகர்)அரச குடும்பத்தை சேர்ந்தவர் தான் அஜய் ஜடேஜா. தற்போது இந்த அரச குடும்பத்தின் ஜாம் நகர் சாஹேப்பாக இருப்பவர் சத்ருசல்யா சிங்ஜி திக்விஜய்சிங்ஜி ஜடேஜா உள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரான இவருக்கு மனைவி இல்லை. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரித்து வாழ்கின்றனர். அதேபோல் சத்ருசல்யா சிங்ஜி திக்விஜய் சிங்ஜி ஜடேஜாவுக்கு வாரிசு இல்லை.
இப்போது சத்ருசல்யா சிங்ஜி திக்விஜய்சிங்ஜி ஜடேஜாவுக்கு 85 வயது ஆகிறது. இவர் 1966ம் ஆண்டில் தனது தந்தை மறைவுக்கு பிறகு நவா நகர் அரசராக பொறுப்பேற்றார். அதன்பிறகு 1971ம் ஆண்டில் நம் நாட்டில் மன்னர் அரசாட்சியை கட்டுப்படுத்தும் 26வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு சத்ருசல்யா சிங்ஜி திக்விஜய்சிங்ஜி ஜடேஜா ஜாம் நகர் சாஹேப் என்று அழைக்கப்படுகிறது. இது அரச குடும்ப வாரிசை குறிக்கும்.
இந்நிலையில் தான் வாரிசு இல்லாத காரணத்தால் சத்ருசல்யா சிங்ஜி திக்விஜய்சிங்ஜி ஜடேஜா, அஜய் ஜடேஜாவை ஜாம் நகர் சாஹேப் என்று அரச குடும்ப வாரிசாக அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‛‛தசரா பண்டிகையானது பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்து வெற்றி பெற்ற நாளைக் குறிக்கும் என நம்பப்படுகிறது.
தசரா நாளில் அஜய் ஜடேஜா என்னுடைய வாரிசாக இருப்பதற்கு ஏற்றுக் கொண்டு, எனக்கிருந்த இக்கட்டான பிரச்னைக்கு ஒரு தீர்வு வழங்கி உள்ளார். இதனால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஜாம் நகர் மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பை அஜய் ஜடேஜா ஏற்றுக் கொண்டது ஜாம் நகர் மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’’ எனக்கூறியுள்ளார்.
தற்போது ஜாம் நகர் அரசு குடும்ப வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள அஜய் ஜடேஜா யார் என்றால் சத்ருசல்யா சிங்ஜி திக்விஜய் சிங்ஜி ஜடேஜாவின் உடன்பிறவாத சகோதரர் தவுலத் சிங் ஜடேஜாவின் மகன் ஆவார். அதாவது சத்ருசல்யா சிங்ஜி திக்விஜய் சிங்ஜி ஜடேஜாவின் தந்தை பெயர் திக்விஜய் சிங். இவரது சகோதரரின் பெயர் பிரதாப் சிங். இந்த பிரதாப் சிங்கின் மகன் தவுலத் சிங்கிற்கு பிறந்தவர் தான் அஜய் ஜடேஜா ஆவார்.
அஜய் ஜடேஜாவின் தந்தையான தவுலத் சிங் ஜடேஜா 1971, 1980, 1984 ஆகிய ஆண்டுகள் காங்கிரஸ் சார்பில் ஜாம் நகர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு 3 முறை எம்பியாக இருந்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் ஜாம் நகர் அரச குடும்ப வாரிசாக செயல்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ரஞ்சித்சிங், துலீப்சின் ஆகியோர் இந்த பொறுப்பை வகித்துள்ளனர். இவர்கள் அஜய் ஜடேஜாவின் உறவினர்கள் ஆவார்கள்.
தற்போது ஜாம் நகர் அரச குடும்ப வாரிசா அஜய் ஜடேஜா தேர்வானதன் மூலம் அவரது சொத்து மதிப்பு என்பது பல மடங்கு உயர உள்ளது. ஏனென்றால் ஜாம் நகர் சாஹேப்புக்கு என்று தனி அரண்மனை, ஏராளமான நிலங்கள், தங்க வைர நகைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications