சிலருக்கு என் “போட்டோ” மீதே கவலை! ‘கியூ’வை ஒழிச்சுட்டோம் - உலகமே நம்மை பார்த்து.. எதை சொல்றார் மோடி?
குஜராத்: கொரோனா தடுப்பூசி செலுத்தியவுடன் இந்தியா எப்படி சான்றிதழ் வழங்குகிறது என்று உலகமே பேசிக் கொண்டிருக்க, சிலர் அந்த சான்றிதழில் ஏன் மோடியின் படம் இருக்கிறது என்பதில் கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி "டிஜிட்டல் இந்தியா வாரம் 2022" என்ற நிகழ்வை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், "தொழில்நுட்பத்தை முறையாக பயன்படுத்துவதே புரட்சியாகும். தொழில்நுட்பத்தை பெரிய அளவில் பயன்படுத்த பழகிக்கொள்ளவில்லை என்றால், காலம் நமக்காக காத்திருக்காது.
தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் குஜராத் முன்னோடியாக திகழ்கிறது. குஜராத்தில் பயன்படுத்திய தொழில்நுட்பங்களின் மூலம் கிடைத்த அனுபவத்தின் காரணமாக தேசிய அளவில் அரசாங்கத்தை நிர்வகிப்பதற்கு தொழில்நுட்பங்களை கொண்டு வர முடிந்தது. 21 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்களுக்கு டிஜிட்டல் இந்தியா வாழ்வை எளிதாக்கி இருக்கிறது.

வரிசையை ஒழித்துவிட்டோம்
எங்கு சென்றாலும் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால், நாம் இணையதள வசதி மூலமாக வரிசை முறையை இல்லாமல் ஆக்கினோம். இன்று கிராமங்களிலேயே மக்கள் பல சேவைகளை பெற்று வருகிறார்கள். ஆன்லைன் சேவைகள் காரணமாக இந்தியாவில் ஊழல் ஒழிந்துள்ளது. 4 வது தொழிற் புரட்சியை இந்தியா தலைமையேற்று நடத்துகிறது.

ஆன்லைன் பரிவர்த்தனை
கடந்த 8 ஆண்டுகளில் 23 லட்சம் கோடி ரூபாய் நிதி ஆன்லைன் மூலமாக பரிமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அந்த தொகை தவறானவர்கள் கைகளில் கிடைப்பதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் இலவச வைபை சேவைகளை பயன்படுத்தி மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகின்றனர். 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் பெற்றோருடன் சேர்ந்துள்ளனர்.

15 லட்சம் இளைஞர்கள்
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் டிஜிட்டல் பணபரிமாற்றம் 40% அதிகம் உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 15 லட்சம் இளைஞர்களை திறன் மிக்கவர்களாக ஆக்குவோம். டிஜிட்டல் இந்தியாவால் ஏழைகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ஊழல் ஒழிக்கப்பட்டு இருக்கிறது. இடைத்தரகர்கள் காணாமல் போயுள்ளனர். டிஜிட்டல் இந்தியா பிரச்சாரம் இந்தியாவில் இன்னும் அதிகரிக்கும்.

கொரோனா சான்றிதழ்
டிஜிட்டல் இந்தியா சாதாரண மனிதனின் வாழ்வில் தொடர்புடையது. மக்கள் திறமையானவர்கள்தான். ஆனால், அவர்களுக்கு வாய்ப்புகள் தேவை. நமது அரசு இளைஞர்களுக்கு வாய்ப்புகளை அளித்து வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தியவுடன் இந்தியா எப்படி சான்றிதழ் வழங்குகிறது என்று உலகமே பேசிக் கொண்டிருக்க, சிலர் அந்த சான்றிதழில் ஏன் மோடியின் படம் இருக்கிறது என்பதில் கவனம் செலுத்துகின்றனர்." என்றார்.












Click it and Unblock the Notifications