சினிமா துறை குடும்ப பெண்கள் தினமும் கணவர்களை மாற்றிக்கொள்கிறார்களாம்.. பாஜக எம்.பி பகீர் கருத்து
மும்பை: சினிமாத்துறையில் உள்ளவர்களின் குடும்ப பெண்கள் தினமும் கணவர்களை மாற்றுவார்கள் என்று பாஜக எம்.பி கூறிய கருத்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, இயக்கத்தில் டிசம்பர் 1 ம் தேதி நாடு முழுக்க தயாராக ரெடியாகியுள்ளது பத்மாவதி என்ற திரைப்படம். இதற்கு பாஜகவை சேர்ந்த பலரும், சிவசேனை தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இப்படம் குறித்து பா.ஜ. எம்.பி சிந்தாமணி மல்வியா தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தால் சர்ச்சை வெடித்துள்ளது.
கற்பை காப்பாற்றினார்
இதுகுறித்து பேஸ்புக்கில் அவர் கூறியுள்ளதாவது: முகலாய மன்னரான அலாவுதீன் கில்ஜி தன்னை கவர்ந்து செல்ல வந்த போது, தனது கற்பை காப்பாற்றிக் கொள்ள, ராணி பத்மினி தன்னை தீயிட்டு எரித்துக் கொண்டதாக சில கதைகள் கூறுகின்றன.
காதல் கதை
ஆனால் பன்சாலி தனது படத்தில், அலாவுதீன் கில்ஜியை, ராணி பத்மினி காதலிப்பதை போல காட்டியுள்ளதாக தெரிகிறது. நமது வரலாற்றை மாற்றுவதாகவும், பத்மினியை அவமதிப்பதாகவும் உள்ளது. ராணி பத்மினியை இவ்வாறு அவமதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது கண்டனத்திற்குரிய செயல்.
சினிமாக்காரர்களுக்கு புரியாது
பத்மினியுடன் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்களின் மானத்தை காத்துக் கொள்வதற்காக எரியும் தீயில் இறங்கினர். இந்த தியாகம் என்பது, சினிமா எடுப்பவர்களின் குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு தெரியாது. அவர்களால் புரிந்து கொள்ளவும் முடியாது.
தினமும் கணவனை மாற்றுகிறார்கள்
ஏனெனில் சினிமாத்துறையிலுள்ளவர்கள் குடும்பத்து பெண்கள் தினமும் கணவர்களை மாற்றுபவர்கள். இவ்வாறு சிந்தாமணி மல்வியா கூறியுள்ளார். மேலும், ஷூக்களின் மொழியைத்தான் பன்சாலி புரிந்துகொள்வார் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.