தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக "கல்வியும் காவலும்".. பள்ளி மாணவர்களுக்கான திட்டம்.. பூரித்த பெரம்பலூர்
பெரம்பலூர்: தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக காவல்துறையில் "கல்வியும் காவலும்" என்ற பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு திட்டம் துவங்கப்பட்டுள்ளது.. இந்த திட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது..
பெரம்பலூர் காவல்நிலையத்தில், எஸ்பி ஷ்யாம்ளா தேவி தலைமையில் "கல்வியும் காவலும்" என்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

காவல்துறை மக்களின் நண்பன் என்பதை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணர்த்தும் நோக்கிலும், காவல்துறையினரின் அன்றாட செயல்பாடுகள் குறித்து எளிதில் மாணவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது..
பெரம்பலூர்: இந்த கல்வியும், காவலும் திட்டத்தில் சுமார் 400 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மதியழகன், வேலுமணி, துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசுவரன், விஜயலட்சுமி மற்றும் போதை மற்றும் மனநல மருத்துவர் சுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாணவிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி, போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்தும், அங்கு பணிபுரியும் ஒவ்வொரு போலீசாரின் பொறுப்புகள் பற்றியும் எடுத்து சொன்னார்..
சைபர் பிரிவு: மேலும் காவல் துறையில் இயங்கும் விரல் ரேகை பிரிவு, மோப்ப நாய் படை பிரிவு, வெடிகுண்டு தடுப்பு பிரிவு, சைபர் குற்றங்கள் தடுப்பு பிரிவு மற்றும் காவல் துறையில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் குறித்து மாணவிகளுக்கு விளக்கமாக எடுத்து கூறினார்.
இறுதியில், மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி, இந்த திட்டம் குறித்து மாணவிகளிடம் விரிவாக எடுத்துரைத்தார்.. அப்போது அவர் பேசும்போது, "தொடுதல் குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டும்... மாணவிகள் எதற்கும் பயந்துகொண்டு தங்களுக்கு நடக்கும் பிரச்னைகளை பெற்றோர்களிடம் சொல்லாமல் இருக்க கூடாது. அப்படி சொல்ல முடியாத சூழ்நிலையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து நேரடியாகவே புகார் அளிக்கலாம்.. மாணவர்களுக்காக கடமையாற்ற காவல்துறை காத்திருக்கிறது...
பரிசுகள்: இந்த கல்வியும் காவலும் திட்டத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைதோறும் போலீஸ் நிலையங்களுக்கு மாணவ-மாணவிகளை வரவழைத்து மேற்படி விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட உள்ளது..
இந்த திட்டம் தொடர்பாக பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகள் நடத்தப்படும். அந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டால் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications