தாஜ்மகாலில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் - உ.பி அரசிடம் அறிக்கை கேட்டார் சுஷ்மா ஸ்வராஜ்
தாஜ்மகாலில் வெளிநாட்டுத் தம்பதிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில், மத்தியமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உ.பி. அரசிடம் விளக்கம் கேட்டார்.
டெல்லி: ஆக்ராவிற்கு சுற்றுலா வந்த ஸ்விட்சர்லாந்து தம்பதிகள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து உ.பி. அரசிடம் விளக்கம் கேட்டார் மத்தியமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலைப் பார்வையிட உலகம் முழுவதில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இதனால் மாநில அரசுக்கும் நல்ல சுற்றுலா வருவாய் கிடைக்கிறது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்விட்சர்லாந்து தம்பதிகள் தாஜ்மகாலைப் பார்வையிட வந்திருந்தனர். அவர்கள் அங்கிருக்கும் ரயில் தண்டவாளம் அருகே நடந்து சென்ற போது, நான்கு பேர் கொண்ட கும்பல் அவர்களைப் பயங்கரமாகத் தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர்கள் டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து காவல்துறையில் புகார் எதுவும் அளிக்கப்படாத நிலையில் , காவல்துறையே முன்வந்து விசாரித்து வருகிறது. இதில் முகுல் என்பவரது தலைமையில் அவர்கள் தாக்கப்பட்டார்கள் என்றும், செல்பி எடுக்கும் போது ஏற்பட்ட பிரச்னை தான் காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவம் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து உ.பி. அரசிடம் விளக்கம் கேட்டு இருக்கிறார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.












Click it and Unblock the Notifications