'தேடப்படும் குற்றவாளி' மோடிக்கு உதவிய சுப்ரீம் கோர்ட் மாஜி நீதிபதி உமேஷ் பானர்ஜி- திடுக் தகவல்
டெல்லி: இந்தியாவால் தேடப்படுகிற குற்றவாளியான ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவியவர்களில் அரசியல் தலைவர்களைத் தொடர்ந்து நீதிபதிகள் பெயரும் வெளியாகி வருகிறது. லலித் மோடி இங்கிலாந்தில் தங்குவதற்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மறைந்த உமேஷ் சி பானர்ஜி உதவி செய்தது தற்போது தெரியவந்துள்ளது.
ஐ.பி.எல். போட்டிகளில் ரூ1,700 கோடி மோசடி செய்துவிட்டு இங்கிலாந்துக்கு தப்பி ஓடி தலைமறைவானவர் லலித் மோடி. லண்டனில் இருந்து கொண்டு இந்திய கிரிக்கெட் விவகாரங்களில் கருத்துகளை தெரிவித்து வந்தார்.
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் லலித் மோடியை நாடு கடத்தி கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மோடி ஆட்சிக் காலத்தில் இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் லலித் மோடிக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராஜே சிந்தியா ஆகியோர் உதவியது அம்பலமானது.
இதனை லலித் மோடியே பகிரங்கமாக ஒப்பும் கொண்டுள்ளார். இதனால் சுஷ்மா, வசுந்தரராஜே ஆகியோர் ராஜினாமா செய்தாக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் லலித் மோடிக்கு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மறைந்த உமேஷ் சி பானர்ஜியும் உதவியிருக்கிறார். இவர் ஆந்திரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியிருக்கிறார். சார்க் அமைப்பின் சட்டப் பிரிவின் செயலாளராகவும் இருந்துள்ளார்.
2012ஆம் ஆண்டு லலித் மோடியின் விசா காலாவதியாகிறது. இதனைத் தொடர்ந்து லலித் மோடி இங்கிலாந்தில் தங்கியிருப்பதை நியாயப்படுத்தி உமேஷ் பானர்ஜி அந்நாட்டு அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தால் குறிப்பாக மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்த என்.சீனிவாசன் ஆகியோர் இணைந்து லலித் மோடியை பழிவாங்குவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. அதை சுட்டிக்காட்டியும் அமலாக்கப் பிரிவு வழக்குகளில் லலித் மோடி நேரில்தான் ஆஜராக வேண்டும் என்பதில்லை என்பது உள்ளிட்ட சட்டப் பிரிவுகளை அடுக்கியும் லலித் மோடி இங்கிலாந்தில் தங்கியிருக்கலாம் என கடிதம் கொடுத்திருக்கிறார் உமேஷ் பானர்ஜி.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா, பொருளாதார வழக்கின் குற்றவாளி ஒருவருக்கு உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த ஒருவரே உதவியிருப்பது என்பது கவலையளிக்கக் கூடியது என்று விமர்சித்துள்ளார்.