பதன்கோட்டில் மீண்டும் துப்பாக்கிச் சூடு- வான்வெளியில் இருந்து விமானப்படை தாக்குதல்!!
பதன்கோட்: பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானபடை தளம் அருகே மீண்டும் துப்பாக்கிச் சூட்டு சப்தங்கள் கேட்பதால் மேலும் சில தீவிரவாதிகள் அங்கு பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அப்பகுதி மீது விமானப் படையினர் வான்வெளியில் இருந்து அதிரடி தாக்குதல் நடத்தினர்.
பாகிஸ்தான் எல்லைப் பகுதியான பதன் கோட்டில் உள்ள விமானப் படை தளத்தை இலக்கு வைத்து இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர்.

சுமார் 5 மணிநேரம் நீடித்த இத்துப்பாக்கிச் சண்டை காலை 9 மணிக்கு முடிவுக்கு வந்தது. இதில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அதன் பின்னர் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியும் கையெறிகளை குண்டுகளை வீசியும் உள்ளனர்.
இதனால் மேலும் சில தீவிரவாதிகள் அங்கே பதுங்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் விமானப் படை ஹெலிகாப்டர்கள், விமானங்கள் தேடுதல் நடவடிக்கையில் இறக்கிவிடப்பட்டன.

தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தின் மீது வான்வெளியில் இருந்து விமானப் படையினர் தாக்குதல் நடத்தினர். மேலும் பதன் கோட்டில் இருந்து ஹிமாச்சல், ஜம்மு காஷ்மீர் செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications