இன்று முதல்.. மாநிலம் விட்டு மாநிலம் போனாலும் ரோமிங் கட்டணம் இன்றி செல்போனை பயன்படுத்தலாம்!
டெல்லி: வேறு மாநிலத்துக்கு இடம் பெயர்ந்தாலும், ரோமிங் கட்டணம் இன்றி, அதே செல்போன் நம்பரை பயன்படுத்தும் திட்டம் இன்று முதல் நாடெங்கும் அமலுக்கு வந்துள்ளது.
தற்போது நெட்வொர்க் சேவை நிறுவனத்தை மாற்றினாலும், அதே செல்போன் எண்ணை பயன்படுத்தும் வசதி அமலில் உள்ளது. ஆனால் வேறு மாநிலங்களுக்கு பயனாளி இடம் பெயரும்போது, ரோமிங் இன்றி அந்த எண்ணை பயன்படுத்திக்கொள்ள முடிவதில்லை. எனவே வேறு நம்பர் பெற வேண்டியுள்ளது.

இதற்கு மாற்றாக, வேறு மாநிலங்களுக்கு சென்றால் அதை அங்குள்ள லோக்கல் எண்ணாக மாற்றித்தர செல்போன் சேவை நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டது. உதாரணத்துக்கு, சென்னையில் இருந்து பெங்களூர் வந்து ஒருவர் தங்கியிருந்தால், அவர் சென்னையில் பயன்படுத்திய எண்ணை, பெங்களூர் வட்ட எண்ணாக மாற்ற வேண்டும். ஆனால் நம்பர் மாறக்கூடாது. இதன்மூலம், அந்த எண்ணை மீண்டும் சென்னைக்கு கொண்டு சென்று பேசும்போதுதான் ரோமிங் கட்டணம் வசூலிக்கப்படுமே தவிர பெங்களூரில் பேசும்போது வசூலிக்க முடியாது.
இத்திட்டத்தை செயல்படுத்த, கடந்த மே 3ம் தேதி தான் காலகெடுவாக இருந்தது. ஆனால் தொழில்நுட்ப மாற்றங்கள் செய்ய 2 மாதகாலம் அவகாசம் கேட்டன நெட்வொர்க் நிறுவனங்கள். அக்கோரிக்கையை அரசு ஏற்றது. கெடு முடிந்த நிலையில் இன்று முதல் இவ்வசதியை ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட பல செல்போன் நிறுவனங்களும் வழங்க ஆரம்பித்துவிட்டன. இந்த வசதி பெற கட்டணம் ரூ.19.
இந்த தேசிய மொபைல் நம்பர் போர்டபிலிட்டியால், நாடு முழுவதிலும் உள்ள மொபைல் வாடிக்கையாளர்கள் தற்போது எளிதாக தங்களின் மொபைல் எண்ணை மாற்றாமல் மாநிலங்களின் இடையே மாற்றம் செய்து கொள்ள முடியும் என்று ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications