ஆன்லைன் திருமண மோசடி- பெண் உள்பட 5 பேர் கும்பல் கைது
டெல்லி: பிரபல திருமண இணையதளங்கள் மூலமாக மோசடி செய்த பெண் உள்பட 5 பேர் கொண்ட கும்பலை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருமண இணையதளங்களில் பதிவு செய்து வைத்துள்ள பெண்களின் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு இந்தக் கும்பல் பணம் பறித்து வந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக நைஜீரியாவைச் சேர்ந்த ஜோசப் இரபார் பெஹமன் (26), பாவோ ஹிலாரி ஒமக்பேமி (35), நாகாலாந்தைச் சேர்ந்த லெனியா மாக் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சிலர். அனைவரும் குர்கானில் வசித்து வந்தனர்.

மோசடி...
இந்தக் கும்பல் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் ரூ. 48.75 லட்சம் பணத்தை மோசடி செய்துள்ளது. அந்தப் பெண்ணை திருமண இணையதளம் ஒன்றின் மூலம் தொடர்பு கொண்டு நட்பு பாராட்டி இந்த மோசடியைச் செய்துள்ளனர்.

நைஜீரியாவைச் சேர்ந்த...
அதேபோல நைஜீரியாவைச் சேர்ந்த ஹென்றி சிமா அனிட்பே (30) என்ற இன்னொரு நபரும் பிடிபட்டுள்ளார். இவர் கஸ்டம்ஸ் அதிகாரி போல நடித்து போனில் பேசி மோசடி செய்து வந்துள்ளார்.

பிரபல திருமண இணையதளங்கள்...
இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் வாய்ப் வசதியைப் பயன்படுத்தியும், பிற தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தியும், மோசடி செய்து வந்துள்ளனர். பாரத் மேட்ரிமோனி, சிம்ப்ளி மேரி, ஷாதி.காம் போன்ற பிரபலமான திருமண இணையதளங்களில் தகவல் தந்திருக்கும் பெண்களைக் குறி வைத்து இந்த மோசடியை இக்கும்பல் அரங்கேற்றியுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள்...
போலியான புரபைல்களை உருவாக்கி தங்களை வெளிநாடு வாழ் இந்தியர்களாகக் காட்டிக் கொண்டு, பல்வேறு நாடுகளில் பணியில் இருப்பதாக போலியாக காட்டிக் கொண்டு பெண்களை இழுத்துள்ளனர். மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் சிம் கார்டுகளைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட பெண்களிடம் பேசியுள்ளனர். போலியான அடையாளங்களையும் இவர்கள் காட்டியுள்ளனர்.

ஐ.நா. ஊழியர்...
ஹைதராபாத் பெண்ணை டாக்டர் அபிசேஷ் மோகன் என்ற பெயரில் இந்தக் கும்பல் மோசடி வலையில் வீழ்த்தியுள்ளது. தன்னை ஆர்த்தோ டாக்டராக காட்டிக் கொண்டு அந்தப் பெண்ணை மயக்கியுள்ளனர். ஐ.நா.வில் பணிபுரிவதாக கூறியுள்ளனர். தற்போது ஈராக்கில் இருப்பதாகவும் பீலா விட்டுள்ளனர்.

சுங்கத்துறை தீர்வு...
அந்தப் பெண்ணின் நம்பிக்கையைப் பெற்ற பின்னர் மருத்துவ சாதனங்கள், தங்கம், நகைகள் உள்ளிட்டவற்றை அனுப்புவதாக கூறியுள்ளனர். இதற்கான சுங்கத்துறை தீர்வைக்கான பணத்தை மட்டும் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். தான் ஊருக்கு வந்துதம் இந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் மோகனாக நடித்தவர் அப்பெண்ணிடம் பேசியுள்ளார்.

கஸ்டம்ஸ் இன்ஸ்பெக்டர்...
அந்தப் பெண்ணும் இதை நம்பி ஏமாந்து, மோகன் என்ற பெயரில் பேசியவர் கூறிய கணக்கில் பணத்தைப் போட்டுள்ளார். இதையடுத்து கஸ்டம்ஸ் இன்ஸ்பெக்டர் என்று கூறிக் கொண்டு இன்னொரு நபர் அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்தப் பணத்தையும் அப்பெண் கொடுத்துள்ளார்.

சந்தேகம்...
இப்படியாக ரூ. 48 லட்சம் வரை அந்தப் பெண்ணிடம் பணம் பறித்துள்ளனர். அது போதாது என்று மேலும் ரூ. 75 லட்சம் கேட்டுள்ளனர். அதன் பிறகுதான் தான் ஏமாற்றப்படுகிறோமோ என்று அந்தப் பெண்ணுக்கு சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து சைபர் கிரைம் போலீஸில் அவர் புகார் கொடுக்கவே குட்டு வெளிப்பட்டது.












Click it and Unblock the Notifications