ஹாசாரேவை விட சிலர் பெரிய ஆளாக கருதுகின்றனர்: வி.கே. சிங் பேச்சால் சர்ச்சை!
ராலேகான் சித்தி: அன்னா ஹாசாரேவை விட சிலர் பெரிய ஆளாக கருதுகின்றனர் என்று அர்விந்த் கெஜ்ரிவாலை முன்னாள் ராணுவ தளபதி வி.கே. சிங் கடுமையாக தாக்கியுள்ளார்.
முன்னாள் ராணுவ தளபதி வி.கே. சிங் ராலேகான் சித்தியில் நடைபெறும் ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்தில பங்கேற்று இன்று பேசினார். அப்போது மறைமுகமாக அவர் அர்விந்த் கெஜ்ரிவாலை தாக்கி பேசினார்.
அவர் பேசுகையில், சிலபேர் தங்களை அன்னாவை விட பெரியவர்களாக கருதுகின்றனர் என குறிப்பிட்டார். அப்போது அங்கிருந்த ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான கோபால்ராய் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
கெஜ்ரிவால் ஆதரவாளர் கோபம்
கடும் கோபமடைந்த ராய் பதிலடி கொடுக்க தயாரானார். ஆனால் ஹசாரே அவரை தடுத்து வி.கே.சிங்கை தொடர்ந்து பேசுமாறு கூறினார்.
தொடர்ந்து வி.கே.சிங்கின் பேச்சிற்கு இடையூறு ஏற்படுத்த ராய் முயற்சித்தபோது ஹசாரே அவரை கூட்டத்தை விட்டு வெளியேறுமாறு கூறினார்.