அரசியலமைப்பை மதித்து மீண்டும் பணிக்கு திரும்புங்கள்.. மே.வங்க மருத்துவர்களுக்கு மம்தா கோரிக்கை
கொல்கத்தா: மக்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு மீண்டும் பணிக்கு திரும்புமாறு, மேற்குவங்க மாநில மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். மருத்துவரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் அமைந்துள்ள என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள் சிலரை, கடந்த திங்கட்கிழமையன்று நோயாளி ஒருவரது உறவினர்கள் ஒன்று சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் சில மருத்துவர்கள் பலத்த காயடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் அம்மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மருத்துவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, கடந்த சில நாட்களாக போராடி வருகின்றனர். மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை மருத்துவ பணிகளில் ஈடுபட மாட்டோம் என கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களின் இந்த போராட்டத்தால் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான நோயாளிகள் அவதியடைந்துள்ளனர். மேற்குவங்கத்தில் துவங்கிய இந்த போராட்டம், நாடு முழுவதும் பரவியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மம்தா அரசை கண்டித்து மேற்குவங்கத்தில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அம்மாநிலத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது. மேலும் வரும் திங்கட்கிழமை நாடு தழுவிய போராட்டத்தில் ஈடபட உள்ளதாக இந்திய மருத்துவர் சங்கமும் அறிவித்துள்ளது.
இதனையடுத்து மருத்துவர்கள் போராட்ட விவகாரம் தற்போது விஸ்வரூபமெடுத்துள்ளது. இந்நிலையில் மருத்துவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், மருத்துவர்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, மருத்துவ சேவைக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான மக்களை கருத்தில் கொண்டு அனைத்து மருத்துவர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தார். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்க தயாராக உள்ளதாக கூறியுள்ள மம்தா, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முன்வருமாறு மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் பேசிய மம்தா நோயாளியின் உறவினர்களால் தாக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர்களின் அனைத்து செலவுகளையும், அரசே ஏற்று கொள்ளும். போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்களிடம் பேச்சு நடத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழு தயாராக உள்ளது
எனவே அரசியல் அமைப்புக்கு மரியாதை கொடுத்து அரசுடனான பேச்சுவார்த்தைக்கு, மருத்துவர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.