பாஜகவிடம் காசு வாங்கிக்கோங்க.. எங்களுக்கு ஓட்டு போடுங்க - கோவாவை பரபரப்பாக்கிய மம்தா மருமகன்!
பனாஜி: பாஜகவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி தெரிவித்திருக்கிறார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் கட்சி, இந்தியா முழுவதும் தாங்கள் வளர வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்நிலையில், கோவா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் கட்சி போட்டியிடுகிறது. இதற்கான பிரசாரத்தை திரிணாமுல் கட்சி தொடங்கிவிட்டது.

கோவா
கோவாவில் வரும் 14ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இங்கு ஆளும் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல், ஆம் ஆத்மி கட்சிகள் என்று நான்குமுனை போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் கட்சிகள் புது வேகத்தில் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன.கடந்த தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், சுயேச்சைகள், மாநிலக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்தது பாஜக. இந்த முறை மனோகர் பாரிக்கர் மகன் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

திரிணாமுல்
கோவா தேர்தலில் இந்த முறை புது வேகத்துடன் களமிறங்கியுள்ளது திரிணாமுல் கட்சி. இந்நிலையில் திரிணாமுல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொது செயலாளரும், மேற்குவங்க முதல்வர் மம்தாவின் மருமகனான அபிஷேக் பானர்ஜி இன்று பிரசாரம் செய்தார். அப்போது, ''கோவாவில் இன்று சக்திவாய்ந்த கட்சியாக திரிணாமுல் கட்சி உருவெடுத்துள்ளது. இதனை பாஜகவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பணம் வாங்குங்கள்
கோவாவில் நாங்கள் வளர்ந்துவருவதைப் பார்ட்து, எனக்கு 8 முதல் 10 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. ஆளும் பாஜக எவ்வளவு மிரட்டினாலும் பரவாயில்லை, நான் உயிருடன் இருக்கும் வரையிலும், என் நரம்பு நாளங்களில் ரத்தம் ஓடும் வரையிலும் உங்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடுவேன். பாஜகவினரிடம் இருந்து பணம் பெற்றுக் கொள்ளுங்கள். அதேநேரம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்'' என்று பேசியிருக்கிறார்.

மம்தா பானர்ஜி
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குள், தேசியத் தலைவராக முன்னிறுத்திக் கொள்ளவே கோவா தேர்தலில் களமிறங்கியிருக்கிறார் மம்தா பானர்ஜி. மிகப்பெரிய அளவில் கோவா தேர்தலுக்காக மம்தா செலவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. கோவாவில் 11 சதவிகித வாக்குவங்கி கொண்ட மாநிலக் கட்சியான மாகாராஷ்டிரவாடி கோமன்தாக் கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் மம்தா. 2017 தேர்தலில் இந்தக் கட்சி உதவியுடன் தான் பாஜக கோவாவில் ஆட்சியமைத்தது.












Click it and Unblock the Notifications