தேர்வு செய்துவிட்டு 3 ஆண்டுகள் கழித்து அபாயின்ட்மென்ட் கொடுத்த ஹெச்.சி.எல்.: பெண் என்ஜினியர் விளாசல்
பெங்களூர்: கல்லூரி இறுதியாண்டில் வேலைக்கு எடுத்துவிட்டு 3 ஆண்டுகள் கழித்து பணியில் சேர்வதற்கான ஆர்டரை அனுப்பிய ஹெச்.சி.எல். நிறுவனத்தை பெண் ஒருவர் ஃபேஸ்புக்கில் விளாசியுள்ளார்.
பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்தவர் ஷிவானி. கடந்த 2011ம் ஆண்டு இறுதியாண்டு மாணவியாக அவர் இருந்தபோது அவர் படித்த கல்லூரிக்கு ஹெச்.சி.எல். நிறுவனத்தினர் வந்துள்ளனர். கேம்பஸ் பிளேஸ்மென்ட்டில் அவர்கள் ஷிவானி உள்ளிட்ட 40 பேரை தேர்வு செய்துள்ளனர். ஷிவானியை ஹெச்.சி.எல். நிறுவனம் தேர்வு செய்ததால் அவரை கல்லூரி நிர்வாகம் வேறு எந்த கேம்பஸ் பிளேஸ்மென்ட் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க விடவில்லை.

ஹெச்.சி.எல். நிறுவனமோ 3 ஆண்டுகள் கழித்து அவருக்கு பணியில் சேர்வதற்கான கடிதத்தை அனுப்பியுள்ளது. இதை பார்த்த ஷிவானி கோபம் அடைந்து உங்கள் வேலை எனக்கு வேண்டாம் என்று கூறி அந்நிறுவனத்தை ஃபேஸ்புக்கில் விளாசித் தள்ளியுள்ளார். தனக்கு 3 ஆண்டுகள் கழித்து பணிநியமன கடிதத்தை அனுப்பியதும் இல்லாமல் அது குறித்து 3 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு கூறிய ஹெச்.சி.எல். நிறுவனத்தை ஷிவானி திட்டியுள்ளார்.
தனக்கு அப்படி ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்ததையே மறந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளதை சித்தாந்த் மேத்தா என்பவர் ஸ்கிரீன்ஷாட் எடுத்து கடந்த வியாழக்கிழமை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர், 106 பேர் கருத்து தெரிவித்துள்ளனர், 200 பேர் அந்த போஸ்ட்டை ஷேர் செய்துள்ளனர்.
கடந்த 2013ம் ஆண்டு மார்ச் மாதம் கேம்பஸ் பிளேஸ்மென்ட்டில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பெங்களூரில் உள்ள ஹெச்.சி.எல். நிறுவன அலுவலகம் முன்பு வேலை கேட்டு போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications