டெல்லிக்கு போய் கேளுங்கள்.. உத்தரகாண்ட் முதல்வர் பதவி ராஜினாமா ஏன்? பாஜக தேசிய தலைமை அதிரடி முடிவு
டேராடூன்: உத்தரகாண்ட் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 69 சட்டமன்ற தொகுதிகளில் 57 தொகுதிகளில் கடந்த 2017ல் பாஜக வெற்றிபெற்றது. அங்கு பாஜக வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த திரிவேந்திர சிங் ராவத் பிரதமர் மோடி மூலம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அடுத்த வருடம் உத்தரகாண்டில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் திரிவேந்திர சிங் ராவத் தற்போது ராஜினாமா செய்துள்ளார். டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டாவுடன் ஆலோசனை நடத்திய பின் திரிவேந்திர சிங் ராவத் பதவி விலகினார்.
இவரை குறித்து விசாரணை நடத்த பாஜக தேசிய தலைமை சில நாட்களுக்கு முன் நிர்வாகிகளை உத்தரகாண்டிற்கு அனுப்பியது. முதல்வரின் செயல்பாடு சரியாக இல்லை என்று புகார்கள் வந்ததால் இவரை குறித்து விசாரிக்கப்பட்டது .
பொறுப்புடன் இவர் செயல்படவில்லை என்று புகார் வைக்கப்பட்டது. இந்த நிலையில் தேசிய தலைமை கொடுத்த அழுத்தம் காரணமாக இவர் ராஜினாமா செய்துள்ளார். அடுத்த வருடம் தேர்தல் நடக்க உள்ளதால் இவர் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பேசிய திரிவேந்திர சிங் ராவத், உத்தரகாண்ட் முதல்வராக இருந்தது சந்தோஷம். என் வாழ்க்கையில் இது மிகவும் பொன்னான தருணம். கட்சி தலைமைக்கு கட்டுப்படுகிறேன். எனக்கு முதல்வராக இருக்க வாய்ப்பு கொடுத்த தேசிய பாஜக தலைமைக்கு நன்றிகள்.
என்னுடைய பதவி பறிக்கப்பட்டது டெல்லி தலைமை மூலம் எடுக்கப்பட்ட முடிவு. இதற்கான காரணத்தை நீங்கள்தான் டெல்லி தலைமையிடம் கேட்க வேண்டும், என்று திரிவேந்திர சிங் ராவத் கூறியுள்ளார்.
முதல்முறையாக பாஜக முதல்வர் ஒருவர் தனது செயல்பாடு போதுமான அளவில் இல்லை என்பதால் இப்படி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார். ஹரியானா அமைச்சர் தான் சிங் ராவத் உத்தரகாண்டின் அடுத்த முதல்வராக தேர்வாக வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications