ராகுல் காந்திக்கு ‘மோடி-ஃபோபியா’.. விட்டு விளாசும் அமித் ஷா.. பரபரக்கும் கோவா அரசியல் களம்!
கோவா: பாஜகவின் கோவா தேர்தல் பரப்புரையைத் தொடங்கி வைத்துப் பேசிய உள் துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியையும் ராகுல் காந்தியையும் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
அடுத்த மாதம் 5 மாநில தேர்தல் நடைபெறுகிறது. இதில் நாட்டிலேயே குட்டி மாநிலமான கோவாவில் பிப். 14ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
40 சட்டசபை இடங்களைக் கொண்டு கோவாவில் ஒரு கட்சி ஆட்சியை பிடிக்கக் குறைந்தபட்சம் 21 இடங்களைப் பெற்றிருக்க வேண்டும்.

கோவா தேர்தல் களம்
கோவாவில் தற்போது திராணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. அங்குப் பல முனை போட்டி ஏற்பட்டுள்ள போதிலும் அங்குக் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. கடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் பாஜகவிடம் காங்கிரஸ் ஆட்சியைப் பறிகொடுத்தது. ஆனால், இந்த முறை தேர்தலிலேயே பெரியளவில் வெற்றி பெற வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

அமித் ஷா பேச்சு
இருப்பினும், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகத் தேர்தல் பிரசார பணிகள் இன்னும் வேகமெடுக்கவில்லை. இதனிடையே கோவாவின் போண்டாவில் நடைபெற்ற உள்ளரங்கு கூட்டம் ஒன்றில் பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும் உள் துறை அமைச்சருமான அமித் ஷா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியை மிகக் கடுமையாகச் சாடி பேசிய அமித் ஷா, ராகுல் காந்தியைப் பொறுத்தவரைக் கோவா என்பது ஒரு சுற்றுலா தளம் மட்டுமே என்றும் சாடினார்.

சுற்றுலா தளம்
அந்த கூட்டத்தில் பேசிய அமித் ஷா, "ராகுல் காந்தியும் காங்கிரஸ் தலைவர்களும் கோவாவை தங்கள் சுற்றுலாத் தலமாகவே கருதுகின்றனர். அவர்கள் இதற்காக அவ்வப்போது இங்கு வந்து செல்வார்கள். இது அனைவருக்கும் தெரியும். ஆனால் பாஜகவைப் பொறுத்தவரை, (மறைந்த கோவா முதல்வர்) மனோகர் பாரிக்கரின் 'கோல்டன் கோவா' என்ற கனவை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்த இரண்டிற்கும் இடையே தங்களுக்கு என்ன தேவை என்பதைக் கோவா மக்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மோடி-ஃபோபியா
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கோவா ஊழல் மிகுந்த அரசைக் கொண்டிருந்தது. மாநில அரசு ஸ்திரமின்மை இல்லாமலும் குழப்பங்கள் நிறைந்தும் காங்கிரஸ் காலத்தில் இருந்தது. ஆனால், இப்போது நிலைமை அப்படியே மாறிவிட்டது. சிறிய மாநிலங்களின் வளர்ச்சிக்கு மோடி அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. கோவா மாநிலத்திற்கு அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். ராகுல் காந்தி 'மோடி-ஃபோபியா'வால் பாதிக்கப்பட்டுள்ளார்" என்றார்.

அரசியல் கட்சிகள்
கோவா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, என்சிபி போட்டியிடுவது குறித்துப் பேசிய அமித் ஷா, "தங்கள் தளத்தை விரிவுபடுத்தவும் அல்லது தேசிய அங்கீகாரத்தைப் பெறவும் மட்டுமே இந்தக் கட்சிகள் கோவா தேர்தலில் போட்டியிடுகிறது. இந்தக் கட்சிகளால் இங்கு ஆட்சி அமைக்க முடியாது. பாஜகவால் மட்டுமே இங்கு ஆட்சி அமைக்க முடியும். அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத வரையில் எந்தவொரு மாநிலத்தாலும் வளர்ச்சி இருக்காது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு கோவாவில் உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது. இது மத்திய அரசின் உதவி இல்லாமல் நடக்காது என்பதை நாம் மறுந்துவிடக்கூடாது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications