நீடிக்கும் கனமழை: மும்பையில் அனைத்து போக்குவரத்தும் பாதிப்பு! இயல்பு வாழ்க்கை முடங்கியது!!
மும்பை: மும்பையில் மூன்றாவது நாளாக பெய்து வரும் கனமழையால் வாகன போக்குவரத்து மற்றும் மின்சார ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 28 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மும்பையில் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போயுள்ளது.
மகாராஷ்டி மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தாமதமாக தொடங்கி பெய்து வருகிறது. மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது.

வெளுத்து வாங்கிய மழை
மும்பை நகர் மற்றும் புறநகர் முழுவதும் காலை முதல் மாலை வரையிலும் மழை வெளுத்து வாங்கியது. மும்பையின் நகர்ப்புற பகுதிகளான சி.எஸ்.டி., கொலபா, பைகுல்லா, சிவ்ரி, ரேரோடு, மாட்டுங்கா, தாராவி, சயான், மேற்கு புறநகர் பகுதிகளான பாந்திரா, சாந்தாகுருஸ், கார், வில்லேபார்லே, அந்தேரி, போரிவிலி, மலாடு உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்தது.

போக்குவரத்து பாதிப்பு
இதேபோல கிழக்கு புறநகர் பகுதிகளான விக்ரோலி, காஞ்சுர்மார்க், முலுண்ட், பாண்டுப் உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பிரதான சாலைகளில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மோட்டார் சைக்கிள், ஆட்டோக்கள், பஸ்கள், டாக்சிகள் மற்றும் கார்களில் பயணித்தவர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். சாலைகளில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமத்துடன் நடந்து சென்றனர்.

தண்டவாளங்களை சூழ்ந்த மழைநீர்
மழை நீர் தேங்கி நின்ற பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் சென்று தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். பரேல் ஹிந்துமாதா, பித்வாலா சாலை, மகேஷ்வரி பூங்கா ஆகிய பகுதிகளில் அதிகளவில் தேங்கிய மழைநீர் காரணமாக பெஸ்ட் பஸ்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.
கனமழையால் மத்திய ரயில்வேக்குட்பட்ட மெயின் மற்றும் துறை வழித்தடங்களில் பல இடங்களில் தண்டவாளங்களை மழை நீர் சூழ்ந்திருந்தது. இதனால் மின்சார ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. மின்சார ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. சுமார் அரை மணி நேரம் வரையிலும் மின்சார ரயில்கள் தாமதமாக இயங்கின.

கடல் அலைகள் சீற்றம்
மேற்கு ரயில்வே வழித்தடத்தில் மின்சார ரயில்கள் 15 நிமிடங்கள் வரை தாமதமாக இயங்கின. இதனால் ரயில் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். கடல் அலைகள் சற்று சீற்றத்துடன் காணப்பட்டன. 4 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்பி கடற்கரை தடுப்புச்சுவரை ஆக்ரோஷத்துடன் தாக்கின.

வேரோடு சாய்ந்த மரங்கள்
கனமழை காரணமாக நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் குடிசை வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. மழையின் போது மும்பை நகர பகுதியில் 12 மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. கிழக்கு மற்றும் மேற்கு புறநகர் பகுதிகளில் தலா 8 மரங்கள் என மொத்தம் 28 மரங்கள் சாய்ந்து சாலைகளில் விழுந்தன. மேற்கண்ட சம்பவங்களில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

விமானநிலையத்தில் வெள்ளம்
இன்று காலை மும்பையில் புதிதாக கட்டப்பட்டு வரும் விமான நிலையத்தின் உள்ளே வெள்ளம் புகுந்தது. பயணிகளின் உடமைகள் வைக்கும் இடத்திலும் தண்ணீர் புகுந்ததால் உடமைகள் சேதம் அடைந்தன.

தானேயில் கொட்டிய மழை
தானேயில் நேற்று கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. தானே ரயில் நிலையத்தில் மழை நீர், தண்டவாளங்களை மூழ்கடித்தது. மின்சார ரயில்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே ரெயில் நிலையத்திற்கு வந்தன. மேலும் கனமழை காரணமாக கோப்ரி கிழக்கு பகுதியில் உள்ள குடிசை வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியே தீவு போல காட்சியளித்தது

வெள்ளத்தில் மூழ்கிய குடிசைகள்
அங்குள்ள 120 குடிசை வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. வீடுகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியது. கழிவு நீரும், மழைநீரும் சேர்ந்து வீடுகளை குளம் போல் ஆக்கியது. இதனால் குடிசைகளில் வசித்தவர்கள், குழந்தைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.

நீடிக்கும் கனமழை
நேற்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மும்பை நகரில் 50.1 மில்லி மீட்டர், கிழக்கு புறநகரில் 59.4. மில்லி மீட்டர், மேற்கு புறநகரில் 44.9 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. கடந்த பத்துநாட்களில் மும்பையில் 500 மில்லிமீட்டர் அளவு மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

48 மணிநேரத்திற்கு மழை
அடுத்த 48 மணி நேரத்தில் மும்பை மற்றும் கொங்கன் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மும்பை வானிலை ஆய்வு மைய இயக்குனர் வி.கே.ராஜீவ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications