குஹவாத்தி நீதிமன்ற தீர்ப்பு- சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு: கபில் சிபல்
டெல்லி: சிபிஐ சட்டப்பூர்வ அமைப்பு இல்லை என்று குவஹாத்தி நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், நாராயணசாமி ஆகியோர் தெரிவித்துள்ளார்.
சிபிஐ என்பது சட்டப்பூர்வ அமைப்பு இல்லை என்றும், வழக்கு குறித்த முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யக் கூட சிபிஐக்கு அதிகாரம் இல்லை என்றும் அசாம் மாநிலத்தின் குவஹாத்தி நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் சட்ட ரீதியான குவஹாத்தி நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் சட்டம் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியது. இது தொடர்பாக என்ன நடவடிக்கை மேற்கொள்வது என்பது சிபிஐ அமைப்பு சட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கபில்சிபல், குவஹாத்தி நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்றார்.
அதேபோல் குவஹாத்தி தீர்ப்பை எதிர்த்து வரும் திங்கள்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.