குழந்தைகளின் கல்வி, நலன், பராமரிப்பு... அரசு பெண் ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் தொடர் விடுப்புக்கு அனுமதி
டெல்லி: அரசு பணியில் உள்ள பெண் ஊழியர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி, பராமரிப்பு மற்றும் நலன் உள்ளிட்ட காரணங்களுக்காக தொடர்ந்து 2 ஆண்டுகள் விடுப்பு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
கொல்கத்தாவைச் சேர்ந்த ககாலி கோஷ் என்ற அரசு பெண் ஊழியர் தனது மகனை மேல் நிலைத் தேர்வுக்கு தயார் படுத்துவதற்காக 730 நாள்கள் விடுப்பு கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையிட்டார் ககாலி.

அவரது கோரிக்கையை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் ஏற்று அனுமதி அளித்தது. ஆனால் அந்த அனுமதியை கொல்கத்தா உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து ககாலி கோஷ் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஜே.முகோபாத்யாய, வி.கோபால கெளடா ஆகியோர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்தனர். இது தொடர்பாக அவர்கள் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது :-
730 நாட்கள் விடுப்பு...
மத்திய அரசின் சுற்றறிக்கைகள் மற்றும் விதி எண் 43சியை ஆராய்ந்ததில், மத்திய அரசு பெண் ஊழியர்கள், 18 வயதுக்கு உட்பட்ட தங்கள் குழந்தைகளின் நலனுக்காக ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 730 நாட்கள் வரை விடுப்பு எடுக்கலாம்.
இரண்டு குழந்தைகளுக்கு...
இது பெண் ஊழியரின் முழு பணிக்காலத்தில் 2 குழந்தைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.
படிப்பு, நோய் உள்ளிட்ட காரணங்களுக்கும்...
கைக்குழந்தையை பாதுகாப்பதற்கு மட்டுமின்றி, தங்கள் குழந்தைகளின் படிப்பு, நோய் உள்ளிட்ட காரணங்களுக்காகவும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ரத்து...
இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது' என இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications