சப்புன்னு சாம்பாரு.. வாயில் வைக்க முடியாத ரசம்... நிறுத்து கல்யாணத்தை!
பெங்களூரு: விருந்தில் ரசம் ருசியாக இல்லை என்ற காரணத்திற்காக மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்த குனிக்கல் பகுதியில் நேற்று, பிரகாசம்- சவுபாக்கியம்மா தம்பதி மகள் சவுமியா என்பவருக்கும், ஸ்ரீராமபுரம் திம்மையம்மா மகன் ராஜுவுக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது விருந்து சாப்பிட மணமகன் ராஜூ தனது குடும்பத்தினருடன் மிகத் தாமதமாக சென்றுள்ளார்.
அங்கு அவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவில் ரசம் மற்றும் சாம்பார் ருசியாக இல்லை என மணமகன் வீட்டார் குறை கூறியுள்ளனர். இது தொடர்பாக மணமகள் வீட்டாரிடம் அவர்கள் தகராறு செய்துள்ளனர்.
அப்போது அவர்கள், "உங்களுக்காக தனியாக உணவு எடுத்து வைத்திருந்தோம். யாரோ அதனை பரிமாறி காலி செய்து விட்டனர்" என விளக்கம் அளித்துள்ளனர். ஆனால் சமாதானம் அடையாத மணமகன் வீட்டார் மண்டபத்தில் தங்களுக்கென்று ஒதுக்கிய அறைக்கு சென்றனர்.
நேற்று அதிகாலை நலுங்கு நிகழ்ச்சிக்காக மணமகன் குடும்பத்தினரை அழைக்க, பெண் வீட்டார் அவர்களது அறைக்கு சென்றனர். ஆனால் அங்கு மணமகன் இல்லை. இரவோடு இரவாக தனது உறவினர்களோடு அவர்கள் மண்டபத்தைக் காலி செய்து விட்டு சென்றது தெரிய வந்தது.
இதனால் நடைபெற இருந்த திருமணம் தடைபட்டது. பெண் வீட்டார் இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனைக் கண்ட திருமண விழாவுக்கு வந்த கோவிந்த ராஜ் என்ற இளைஞர் சவுமியாவை தான் திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார். இதற்கு சவுமியாவும் சம்மதம் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, நிச்சயிக்கப்பட்ட அதே முகூர்த்தத்தில் சவுமியா கழுத்தில் கோவிந்தராஜ் தாலி கட்டினார். திருமணத்துக்கு வந்தவர்கள் மணமக்களை வாழ்த்தினார்கள்.
ரசம் ருசியாக இல்லை என திருமணத்தை நிறுத்திய மணமகன் குடும்பத்தினர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.