விவசாயிகள் அநாதைகள் அல்ல என்பதை சென்னை போராட்டம் நிரூபித்துவிட்டது.. அய்யாகண்ணு உருக்கம்
விவசாயிகளாகிய நாங்களும் இந்நாட்டு மன்னர்கள் என நிரூபிப்போம் என்று தென்னிந்திய நதி நீர் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாகண்ணு தெரிவித்தார்.
டெல்லி: விவசாயிகளாகிய நாங்கள் அடிமைகள் அல்ல என்றும் இந்நாட்டு மன்னர்கள்தான் என்றும் நிரூபிப்போம் என்றும் அய்யாகண்ணு தெரிவித்தார்.
விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 31-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு வகையில் போராட்டங்களில் ஈடுபட்டும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இந்நிலையில் விவசாயிகள் நிர்வாணமாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் மோடி அரசு மௌனமாக இருப்பதால் தமிழகமே கொந்தளிப்பில் உள்ளது.
இதைக் கண்டித்து, கத்திபாரா பாலத்துக்கு மாணவர்களும், இளைஞர்களும் இன்று காலை பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீஸார் வலுக்கட்டாயமாக சங்கிலியை உடைத்து போக்குவரத்தை சீர் செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலில் ஈடுபடட்தால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து அய்யாகண்ணு தெரிவிக்கையில், விவசாயிகள் அனாதைகள், இரண்டாம் தர குடிமக்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த மோடி அரசுக்கு இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின் மூலம் நாங்கள் அனாதைகள் அல்ல என்று நிரூபித்து விட்டனர்.
எங்களுக்கு மாணவர்கள், இளைஞர்கள் உரிமைக் குரல், போர் குரல் கொடுத்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. இன்னும் தீவிரமாக போராட வேண்டும் என்ற உத்வேகத்தை அளித்துள்ளது. அவர்களின் போராட்டம் ஆறுதலை தருகிறது.
எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை விவசாயிகள் போராட்டம் தொடரும். நாங்கள் அடிமைகள் அல்ல, நாங்களும் இந்நாட்டு மன்னர்கள்தான் என்பதை நிரூபிப்போம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications