டெல்லியே போதும், மகாராஷ்டிர முதல்வராக விரும்பவில்லை - நிதின் கத்காரி
டெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் யார் முதல்வர் என்பதை கட்சித் தலைமை முடிவெடுத்து அறிவிக்கும். நான் மத்திய அமைச்சர் பதவியில் மகிழ்ச்சியாக உள்ளேன். எனவே மகாராஷ்டிர முதல்வராக விரும்பவில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கத்காரி கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மக்கள் மத்தியில் பாஜக மீது பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனை இரு மாநில தேர்தல் வெற்றி காட்டுகிறது.

வரும் காலங்களில் விலைவாசி குறைந்து நாடு வளர்ச்சி பெறும். டெல்லியில் இன்று மாலை பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெறுகிறது. கட்சித் தலைவர் அமித் ஷா தலைமையிலான இந்தக் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். முதல்வர் யார் என்பது குறித்து கட்சியின் தலைமை முடிவு எடுக்கும்.
முதல் முறையாக மகாராஷ்டிராவில் நம்பர் ஒன் கட்சியாக வந்துள்ளது பாஜக. ஆனால் நாங்கள் தனிப்பெரும்பான்மையை எதிர்பார்த்தோம். இருப்பினும் இதுவும் கூட பெரிய வெற்றிதான்.
நான் டெல்லியிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன். இங்கு சிறப்பாக பணியாற்றி வருகிறேன். எனவே மகாராஷ்டிராவுக்குப் போக விரும்பவில்லை என்றார் கத்காரி.
மகாராஷ்டிராவில் பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கிறது. இன்னொரு கட்சியுடன் உதவியுடன் அது ஆட்சியமைக்கும் என்று தெரிகிறது. வெளியிலிருந்து ஆதரவு தர சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் விருப்பம் தெரிவித்துள்ளது. அதேசமயம், முன்னாள் கூட்டாளியான சிவசேனாவுடன் பேச்சு நடத்துகிறது பாஜக.
அதேசமயம், ஹரியானாவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. முதல் முறையாக ஹரியானாவில் பாஜக ஆட்சியமைப்பதால் ஹரியானா பாஜகவினர் பெரும் உற்சாகத்துடன் உள்ளனர்.












Click it and Unblock the Notifications