ஹரியானாவில் பாஜக ஆட்சி கவிழ்ந்தது.. முதலமைச்சர் உட்பட அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா!
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தின் பாஜக முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இம்மாநிலத்தில் பாஜகவுக்கு ஆதரவளித்து வந்த ஜே.ஜே.பி கட்சி தனது ஆதரவை விலக்கிக்கொண்டிருக்கிறது.
முதலமைச்சர் கட்டார் மட்டுமல்லாது அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்திருக்கின்றனர். இருப்பினும் புதிய கூட்டணியுடன் நாங்கள் விரைவில் ஆட்சிக்கு வருவோம் என்று பாஜக நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஹரியானாவில் பாஜக ஆட்சி கவிழ்ந்திருப்பது பேசு பொருளாகியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கின்றன. இதில் மெஜாரிட்டி பெற 46 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும், ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களிலும், இந்திய தேசிய லோக் தள் மற்றும் ஹரியானா லோக்கித் கட்சி தலா ஒரு இடங்களில் வென்றிருந்தது. அதேபோல, சுயேட்சை வேட்பாளர்கள் 7 தொகுதிகளில் வென்றிருக்கின்றனர்.
பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மையாக மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், ஜனநாயக ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து பாஜக ஆட்சியை பிடித்தது. இதற்காக கூட்டணி கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலாவுக்கு துணை முதலமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது ஜனநாயக ஜனதா கட்சி தனது ஆதரவை விலக்கிக்கொண்டிருக்கிறது. எனவே முதலமைச்சர் கட்டார் உட்பட அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
இருப்பினும், சுயேட்சை எம்எல்ஏக்கள் 7 பேரின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியை அமைப்போம் என்று பாஜக கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications