ஜாட் போராட்டத்தால் டெல்லியில் கடும் தண்ணீர் பஞ்சம்: பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை
டெல்லி: டெல்லியில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் அனைத்து பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் ஜாட் சமூகத்தினர் தங்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் முனாக் கால்வாயை ஆக்கிரமித்துள்ளனர். டெல்லிக்கு ஹரியானாவின் முனாக் கால்வாயில் இருந்து தான் அதிக அளவில் தண்ணீர் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் போராட்டக்காரர்கள் கால்வாயை ஆக்கிரமித்து நீர் வினியோகத்தை நிறுத்தியுள்ளதால் டெல்லியில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் டெல்லியில் தண்ணீர் பஞ்சம் 60 சதவீதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் டெல்லியில் நாளை முதல் தண்ணீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கால்வாயில் இருந்து நீர் திறந்துவிடுவது குறித்து மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.












Click it and Unblock the Notifications