'தாதா' தாவூத்தின் தங்கை மாரடைப்பால் மரணம்!
மும்பை: நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் தங்கை ஹசீனா பார்க்கர் மாரடைப்பால் தனது மும்பை வீ்ட்டில் மரணமடைந்தார்.
அவருக்கு வயது 55. ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அவர் மரணமடைந்தார். இவர் நாகபடா பகுதியில் மிகப் பெரிய சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார் இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் டேனிஷ் சில வருடங்களுக்கு முன்பு கார் விபத்தில் இறந்து விட்டார்.
நேற்று பிற்பகலில் அவர் நெஞ்சு வலிப்பதாக கூறவே அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர். ஆனால் அதற்குள்ளாக அவர் மரணமடைந்தார்.

12 பேர் அடங்கிய தாவூத் குடும்பத்தில் 7வது குழந்தை ஆவார் ஹசீனா. இவரது தந்தை முகம்மது இப்ராகிம் மும்பை போலீஸில் காவலராக இருந்தவர்.
கடத்தல் பணம் பறித்தல் என ஹசீனா மீது வழக்குகளும் உள்ளன. ஆனால் இவர் ஒருமுறை கூட கைது செய்யப்பட்டதில்லை.
தாவூத் குடும்ப வரலாறு
முகம்மது இப்ராகிமுக்கு மொத்தம் 12 பிள்ளைகள். இதில் தாவூத் 3வது பிள்ளை. ஹசீனா 7வது பிள்ளை.
தாவூத்தின் மூத்த சகோதரி சயீதா மற்றும் அண்ணன் சபீர் அகமது ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டனர். எனவே வீட்டுக்கு மூத்தவராக தாவூத் இருந்து வருகிறார்.
ஹசீனாவின் கணவர் இப்ராகிம் இஸ்மாயில் பார்க்கர் 1991ம் ஆண்டு கொல்லப்பட்டு விட்டார்.
தாவூத் இப்ராகிம் மும்பையில் நடந்த பல குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குக் காரணமானவர். தீவிரவாதிகளுடன் நெருங்கிய உறவாடி வருபவர். தற்போது பாகிஸ்தானில் வாழ்ந்து வருகிறார். நீண்ட காலமாகவே அவர் கராச்சியில் பலத்த பாதுகாப்புடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications