ஹெச்டிஎப்சி துணை தலைவர் சித்தார்த் மாயம்.. ரத்தக்கறை படிந்த கார் கண்டெடுப்பு.. மும்பையில் பரபரப்பு
மும்பை: ஹெச்டிஎப்சி வங்கியின் துணை தலைவர் சித்தார்த் சங்வி (38) கடந்த 3 நாட்களாக மாயமாகியுள்ளார். ரத்தக் கறை படிந்த அவரின் கார் மும்பையின் ஒரு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு மும்பையின் முக்கியமான பகுதிகளில் ஒன்றான மலபார் ஹில் பகுதியில் வசித்து வருபர் சித்தார்த் சங்வி. கடந்த 5ம் தேதி புதன்கிழமை காலை 8.30 மணிக்கு, தனது காரில் அவர் அலுவலகம் கிளம்பினார். அவரது அலுவலகம் கமலா மில்ஸ் பகுதியில் உள்ளது.
ஆனால், சித்தார்த் சங்வி இரவு வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரின் மனைவி என்.எம்.ஜோஷி மார்க், போலீசில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த போலீசாருக்கு இன்று முக்கிய துப்பு கிடைத்துள்ளது.
காரில் ரத்தக்கறை
நவி மும்பை பகுதியிலுள்ள ஐரோலி செக்டார் 11 பகுதியில் சித்தார்த் சங்வி பயணித்த மாருதி இக்னிஸ் கார் கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது. அதில் ரத்தக்கறைகள் படிந்திருந்தன. பின் சீட்டில் கத்தியொன்றும் கண்டெடுக்கப்பட்டது. காரில் படிந்திருந்த ரத்தக் கறை சோதனைக்காக தடயவியல் ஆய்வகத்திற்கு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆபீசிலிருந்து கிளம்பினார்
கமலா மில் காம்பவுண்டு பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை கொண்டு போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள். அதில் இரவு 7.30 மணியளவில், சித்தார்த் சங்வி அலுவலகத்தை விட்டு வெளியேறியது தெரியவந்துள்ளது.
சிசிடிவி காட்சிகள்
ஆனால், அந்த இடத்தைவிட்டு அவர் கார் வெளியேறிய காட்சிகள் இல்லை. இரவு 7 மணிவரையில் கமலா மில் பகுதியிலுள்ள செல்போன் கோபுரத்தில் சித்தார்த் சங்வி செல்போன் சிக்னல் காட்டுகிறது. அதன்பிறகு, சித்தார்த் சங்வி செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
போன் சோதனை
இதையடுத்து சித்தார்த் சங்வி தொலைபேசி அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. யார் யாரிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது, அழைப்பு சென்றது என்பது பற்றி ஆய்வு நடக்கிறது. காணாமல் போனவரை கண்டுபிடிப்பது எங்கள் முதல் இலக்கு என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.